பக்கம் எண் :

சீறாப்புராணம்

1454


இரண்டாம் பாகம்
 

    (இ-ள்) வண்டுகள் இசைப்பாட்டுகளைப் பாடா நிற்கும் பூமாலையைத் தரித்த தோள்களையுடைய ககுபு றலி யல்லாகு அன்கு என்று சொல்லுகின்ற அரசரானவர் அவர்கள் அவ்வாறு சாய்ந்ததைப் பார்த்து உபாத்தானார்களோ? என்று இதயத்திற் கலக்கத்தைப் பெற்று றசூலாகிய அந்நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது சந்நிதானத்தில் வந்து நெருங்கினார்கள். அப்படி வந்து நெருங்கின மாத்திரத்தில் அவர்கள் தங்கள் தாமரை மலரை நிகர்த்த கண்களினாற் குறிப்பிட்டு யாதொன்றும் பேசாமற் பொருந்தும் வண்ணம் பார்த்தார்கள்.

 

4006. ஆய்ந்த நெஞ்சினர் ககுபுகாண் டலுமட னயினார்

     வீய்ந்த தின்றுநந் தீனவ ரேபெறு விசயந்

     தீய்ந்து போம்படி சென்றனி ரோதிகைத் தனிரோ

     சாய்ந்து போகின்ற தென்னெனக் கூவினர் தழைப்ப.

247

     (இ-ள்) தெளிந்த இதயத்தை யுடைய அந்நாயக மவர்கள் அந்தக் ககுபு றலி யல்லாகு அன்கு அவர்களை அவ்வாறு பார்த்த மாத்திரத்தில், அவர்கள் நமது தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்களே! வலிமையைக் கொண்ட நயினா ரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் உபாத்தாகவில்லை. நாம் கொள்ளா நிற்கும் வெற்றியானது தீய்ந்து போகும் வண்ணம் நீங்கள் போனீர்களோ? அல்லது பிரமித்து விட்டீர்களோ? நீங்கள் பின்வாங்கிப் போவது எதனா லென்று தழைக்கும்படி சத்த மிட்டார்கள்.

 

4007. வாரு மென்றவ ரடிக்கடி விளிக்கின்ற வாய்மை

     பாரு நம்மையும் வகுத்தளித் தவனருட் படியாற்

     றேருங் காவத வழித்திசை கேட்டனர் தீனோ

     ரியாரு மீண்டனர் கபீபைவந் தணுகின ரெங்கும்.

248

     (இ-ள்) அந்தக் ககுபுறலி யல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு வாருங்களென்று அடிக்கடி கூப்பிட்ட சத்திய வசனத்தை இவ்வுலகத்தையும் நம்மையும் படைத்து காக்கின்றவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணியத்தின் வண்ணத்தால் தேருகின்ற காதவழித் தூரம் நான்கு திசைகளிலுங் கேள்வியுற்றார்கள். அதனால் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அசுஹாபிமார்க னளைவருந் திரும்பி வந்து ஹபீபென்னுங் காரணப் பெயரையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை எவ்விடத்தும் நெருங்கினார்கள்.