பக்கம் எண் :

சீறாப்புராணம்

1457


இரண்டாம் பாகம்
 

பேசுகின்றாய், கோபித்தாய், பயப்பட்டாய், தோற்றாய், சீ! இது உனக்குத் தகாது, உன் கழுத்தின்கண் விளங்குவ தான காயமும் மற்றியாது மில்லை யென்று தெரிவித்தார்கள்.

 

4015. உற்ற வாசகங் கூறினி ரேதென வுணர்ந்தீர்

     குற்றி னான்குறைத் தான்பெரும் வஞ்சனைக் கொலைசெய்

     தெற்றி னானுய்வ தேதுவல் லுயிரையு மெளிதிற்

     பற்றி னானென்று சாய்ந்தனன் விழுந்தனன் படியில்.

256

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு தெரிவிக்க, அவன் நீங்கள் சரியான வார்த்தை சொன்னீர்கள். யாதென்று நீங்கள் அறிந்தீர்கள். அந்த முகம்மதென்பவன் என்னைக் குற்றினான். குறைத்தான். பெரிய மாயமாகிய கொலையைச் செய்து எற்றினான். நான் இனிப் பிழைப்பதேது? எளிதில் வலிமை பொருந்திய எனது பிராணனையும் பற்றிக் கொண்டா னென்று சொல்லிப் பூமியிற் சரிந்து விழுந்தான்.

 

4016. ஒடுங்கி வாய்புலர்ந் தாதெய்வ மேயுனை யுவந்து

     தொடங்கிப் பூசைசெய் திடுபல னியாவுமே தோன்றி

     யிடங்கொண் டிப்படி யோவந்து முடிந்ததென் றேங்கி

     நடுங்கித் துன்புற்று வீந்தனன் போயின னரகம்.

257

     (இ-ள்) அவ்வாறு விழுந்து சோர்ந்து வாயானது உலரப் பெற்று ஆ? தெய்வமே! யான் உன்னை விரும்பிப் பூசையை ஆரம்பித்துச் செய்த பிரயோசனங்க ளனைத்தும் அகன்று தோன்றி வந்து இந்தப்படியா? நிறைவேறிற் றென்று நடுக்கமுற்று அழுது துன்பத்தைப் பொருந்தி மாண்டு நரகலோகம் போய்ச் சார்ந்தான்.

 

4017. மாறு கொண்டவ னிடத்தினி லேகினன் மருண்டு

     கோறல் செய்தனன் காணெனத் திரும்பினன் குழறி

     யூறுங் காண்கிலம் விழுந்தனன் வீந்தன னுழன்ற

     வாறி தேதெனக் கலங்கினர் பெருங்குபிர் வயவர்.

258

     (இ-ள்) அவன் அவ்வாறு போய்ச் சேர, காபிரான பெரிய வீரர்கள் இந்த உபையென்பவன் விரோதத்தைக் கொண்டவர்களான அந்தச் சத்துராதிகளது இடத்திற் சென்றான். கொலை செய்தானென்று சொல்லி யுளறிக் கொண்டு வெருண்டு திரும்பி வந்தான். நாம் அவன் மீது யாதொரு வடுவையுந் தெரிந்திலோம். பூமியில் விழுந்தான். இறந்தான். அவன் சுழன்று இறந்த வரலாறாகிய இது, என்ன காரணமென்று சொல்லிக் கலக்க மடைந்தார்கள்.