இரண்டாம் பாகம்
4030.
பாரைக் காட்டுமி டந்தோறு
மீமா னீரிற் படர்நறுந்தீன்
வேரைக் காட்டி யெழுந்ததிறல்
வீரன் முகம்ம தெனுமுன்னர்ப்
போரைக் காட்டு நஞ்சேனை
பொருது வெருவி யுடைந்துபின்ன
ரூரைக் காட்டி நின்றதல்லா
லூக்கங் காட்டிற் றிலையன்றே.
3
(இ-ள்) அவ்வாறு வாடி
ஊர்களைக் காட்டுகின்ற தானங்க ளெல்லாவற்றிலும் ஈமானாகிய ஜலத்திற் பரவுகின்ற நறிய தீனுல்
இஸ்லா மென்னும் மார்க்கத்தினது வேரைக் காட்டி எழும்பிய முகம்மதென்று சொல்லும் வலிமையையுடைய
அந்த வீரனது முன்னர் யுத்தத்தைக் காட்டுகின்ற நமது சைனியங்கள் போராடிப் பயந்து தோல்வியடைந்து
பின்னர்த் தங்கள் நகரங்களை நினைப்பூட்டி நின்றனவே யல்லாமல் தங்கள் வல்லமையைக் காட்டிலன.
4031.
காணாத் திறனுங் கொடுஞ்சமருங்
காட்டுங் காலா ளொடுமிவுளி
மாணார் வயவ ரொடுஞ்சுற்றூர்
மற்ற வேந்த ரொடுஞ்சற்று
நாணா தென்றும் போர்வெஃகி
நடந்த தெல்லாம் பார்க்கிலவம்
வீணே போன தன்றிமற்றோர்
வெற்றி கண்டோ மிலையன்றே.
4
(இ-ள்) அன்றியும்,
காணக் கூடாத வல்லமையையும் வெவ்விய யுத்தத்தையுங் காட்டுகின்ற நமது காலாட் சேனையுடனும் மாட்சிமை
பொருந்திய குதிரை வீரர்களுடனும், நமது நகரத்தை வளைந்த மற்ற நகரத்தினது அரசர்களுடனுங் கொஞ்சமேனும்
வெட்கிக்காமல் எந்நாளும் யுத்தத்தை விரும்பி நிகழ்ந்த தனைத்தையும் யோசித்துப்
பார்க்கில் மிகவும் பயனில்லாது போனதே யல்லாமல் வேறே ஓர் வெற்றியும் நாம் பெற்றே மில்லேம்.
4032.
திறந்தா னென்கொ றுணிவென்கொல்
செல்வ மென்கொன் மானமென்கொன்
மறந்தா னென்கொல் படையென்கொன்
மன்னர் வயவாள் வலியென்கொ
லறந்தா னென்கொ றெய்வமென்கொ
லந்தோ வெல்லா மவமேயென்
றிறந்தார் போலப் புலனொடுங்கி
யினைய மனத்தி னியம்பினனால்.
5
|