பக்கம் எண் :

சீறாப்புராணம்

1468


இரண்டாம் பாகம்
 

4041. சிலையைத் தெய்வ மெனவணங்குஞ்

           சிறுமை யதனைத் தெருண்டறியா

     தலையுற் றிடுவன் குபிரரச

           ரடைந்த பெரும்பா சறையேகி

     யிலையிற் சிறந்த வேற்கையபா

           சுபியா னிருக்கை யெய்திநறுங்

     குலனுற் றொழுகார் முகநோக்கிச்

           சிறிது வசனங் கூறுவனால்.

14

     (இ-ள்) அவ்வாறு போய்க் கற்களைத் தெய்வமென்று சொல்லித் தொழா நிற்குங் கீழ்மையைத் தெளிந்துணராமல் அந்த காரத்தைப் பொருந்திய கொடிய காபிர்களது தலைவர்கள் வந்து தங்கிய பெரிய பாசறையின்கண் சென்று இலைகளினால் மேன்மைப்பட்ட வேலாயுதத்தைத் தாங்கிய கையையுடைய அபாசுபியா னென்பவனது இருப்பிடத்திற் போய்ப் பொருந்தி நன்மை பொருந்திய கூட்டத்திற் சேர்ந்து நடக்காதவர்களான அந்தக் காபிர்களது வதனத்தைப் பார்த்துச் சில வார்த்தைகளைச் சொல்லுவான்.

 

4042. மானம் போக்கித் திறனறியா

          வயவ ரொடுவாம் பரியோடுங்

     கானு மலையுங் கடந்திங்ஙன்

          வந்தாய் வென்றி காண்பரிது

     நானஞ் சிறந்த திருத்தூதும்

          வந்தார் நலிந்து நின்றனையா

     லூன மினிமேல் விளைவதென்னோ

          விதியை யுணர மாட்டாதாய்.

15

     (இ-ள்) உனது ஊழை இன்னதென்று தெரிய மாட்டாத அபாசுபியானே! நீ யுனது பெருநன்மையை யொழித்து உன் வல்லமையை யறியாமல் வீரர்களுடனும், பாய்கின்ற குதிரைகளுடனும், காடுகளையும், மலைகளையுந் தாண்டி இங்கு வந்து சேர்ந்தனை. உன்னால் வெற்றியைப் பெற முடியாது, கத்தூரி வாசனையானது சிறக்கப் பெற்ற தெய்வீகந் தங்கிய றசூலான அந்த முகம்மது நபியும் இங்கு வந்து சேர்ந்தார்கள். நீயும் மெலிந்து நின்றாய், இனிமேல் உண்டாகுங் குற்றம் யாதோ? அதையறியேன்.

 

4043. முன்னே வலிதி னெழுவருயிர்

          முடித்தாய் பழியு மேற்கொண்டாய்ப்

     பின்ன ரளவி லாநிதியுங்

          கெடுத்தாய் திறனும் பிழைப்பித்தா