இரண்டாம் பாகம்
யின்னு மிவர்த மாவிவிண்ணி
லேற்றத் துணிந்தா யிவணிருந்தாய்
மன்னாப் பதியிற் செல்கென்ன
வுரைத்தான் மகுப தென்போனே.
16
(இ-ள்) நீ ஆதியில்
ஏழுதலைவர்களது பிராணன்களையும் வலிதில் முடியச் செய்தாய். அவர்களது பழியையும் மேற் போட்டாய்.
பிற்பாடு அளவற்ற திரவியங்களையுஞ் சிதையச் செய்தாய். உனது வல்லமையையும் பிழைப்பிக்கச் செய்தாய்.
இன்னமும் இந்த வீரர்களது பிராணன்களை ஆகாயத்தின்கண் ஏற்றும்படி துணிவு கொண்டு இங்கு வந்து தங்கினாய்.
ஆதலால் இவ்வுலகத்தின் மத்தியில் நிலை பெற்ற திருமக்கமாநகர மென்னும் உனது பட்டினத்திற்
போய்ச் சேருவாயாக வென்று அந்த மகுப தென்பவன் கூறினான்.
4044.
சொல்லா மென்னு மிடிகாதிற்
சொருக வாயீ ரம்புலர்ந்து
கல்லா மென்னு நெஞ்சமிகக்
கரைந்துள் ளிருந்த மதியோட்டிப்
பல்லா யுதமும் வெண்குடையும்
பரியுந் திறனு மற்றுமுள்ள
தெல்லா மறந்து போயினனாங்
கிருந்தா ரொருவ ரிலையன்றே.
17
(இ-ள்) அவ்வாறு கூறிய
வார்த்தைக ளென்று சொல்லும் இடியானது செவிகளில் நுழைய, அந்த அபாசுபியானென்பவன் தனது வாயினிடத்துள்ள
ஈரமானது உலரப் பெற்றுக் கல்லாமென்று கூறும் மனமும் மிகக் கரைந்து அகத்திலுறைந்த அறிவையு மோடச்
செய்து பல ஆயுதங்களையும், வெள்ளிய நிறத்தையுடைய குடைகளையும், குதிரைகளையும், வல்லமையையும்,
பிறவு முள்ள எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவ்விடத்தை விட்டுஞ் சென்றான். அங்கிருந்தவர்களும்
ஒருவருமில்லர். எல்லாருஞ் சென்றார்கள்.
4045.
கிள்ளை யிருப்ப மறமிருப்பக்
கிடையாக் கீர்த்தி தானிருப்ப
வெள்ள மனைய சேனையொடும்
வேந்தன் வாய்மை தனில்வெருவி
யுள்ளங் கலங்கி யோடினனென்
றுணர்த்தக் கேட்டு நபியென்னும்
வள்ளல் பெரும்பா சறையேகிப்
பண்ட மனைத்தும் வௌவினரால்.
18
|