பக்கம் எண் :

சீறாப்புராணம்

1475


இரண்டாம் பாகம்
 

முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில், கொடிய நெருப்பைப் போலும் பையக் கோபத்தை வளர்க்க, அரசர்களாகிய அசுஹாபிமார்க ளனைவரும் கண்களினாற் சுடுகின்ற அக்கினியைச் சிந்தினார்கள். சிரிப்பையுங் காட்டினார்கள். அதரங்களைக் கடித்தார்கள்.

 

4059. புண்டரு படையொடு புரவி சூழ்தர

     வெண்டிசை யினுந்துக ளெழுந்து போர்த்திட

     மண்டலங் கீழுற மகிழ்ந்து போயினா

     ரண்டமோ ரிரவினி னரிதிற் போயினார்.

8

      (இ-ள்) அவ்வாறு கடிக்க, ஓ ரிராத்திரியில் அருமையோடும் வானலோகத்தின்கண் சென்றவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் விரணத்தைத் தருகின்ற ஆயுதங்களோடுங் குதிரை வீரர்கள் சூழவும், தூசிகளெழும்பி எட்டுத் திக்கினும் மூடவும், இப்பூதல மானது கீழாகவுஞ் சந்தோஷத்துடன் அங்குச் சென்றார்கள்.

 

4060. வெற்றிமேற் கொண்டுவிண் ணெழுந்த மூதெயில்

     சுற்றிய நகரினிற் றொகையில் சேனைகொண்

     டுற்றனர் வளைந்தன ருண்ணு நீரையும்

     பற்றின ரடிக்கடி பகையை மூட்டினர்.

9

     (இ-ள்) விஜயத்தை மேலாகக் கொண்டு ஆகாயத்தின்கண் ணெழும்பிய பழமையான கோட்டை மதில்கள் சூழ்ந்த சுகுறாவென்று சொல்லும் அந்த நகரில் அளவற்ற சைனியங்களைக் கொண்டு அவ்வாறு போய்ச் சேர்ந்து அவ்வூரை வளைந்து அருந்துகின்ற ஜலத்தையுங் கைவச மாக்கி அடிக்கடி விரோதத்தை மூளச் செய்தார்கள்.

 

4061.  கொள்ளையங் குடிதொறுங் குறுக லார்கட

     முள்ளமு நெருப்பெழ நெருப்பை யூட்டினர்

     வெள்ளமொத் திருந்தனர் விரியு மொண்சிறைப்

     புள்ளுமந் நகரிற் புகாத வண்ணமே.

10

     (இ-ள்) அன்றியும், அதிகரித்த அழகிய அங்குள்ள குடிகளெல்லாவற்றிலுஞ் சத்துராதிகளான அந்தக் காபிர்களது மனத்திலும் அக்கினி யானது கிளரும் வண்ணம் நெருப்பைப் பற்றப் பண்ணி விரியா நிற்கும் ஒள்ளிய சிறகுகளை யுடைய பட்சிகளும் அந்த வூரில் புகாதபடி சமுத்திரத்தைப் போன்றிருந்தார்கள்.