பக்கம் எண் :

சீறாப்புராணம்

1486


இரண்டாம் பாகம்
 

4087.  நஞ்சினுங் கொடிய மொழிசெவி யோட

          நாட்டங்கள் சிவந்தழ றெறிப்ப

     வெஞ்சினந் தலைப்பெய் தகுமதை நோக்கி

          தீனினை வேண்டில னாவி

     யெஞ்சிடச் சடுதி முடித்திவண் வருவ

          னென்றன ரொருவர தறிந்து

     தஞ்சமென் றுலகந் தாங்கின ரதனைச்

          சம்மதியெனக் கழறி னரால்.

36

      (இ-ள்) அவ்வாறு சொல்லிய விஷத்தைப் பார்க்கிலும் மிக வெவ்விய அந்த வார்த்தையானது காதுகளில் விரைந்து போய் நுழைய, ஓரசு ஹாபியானவர்கள் இருகண்களுஞ் செந்நிறமடையப் பெற்று நெருப்பானது தெறிக்கும் வண்ணங் கொடிய கோபமனைத்தையும் ஒன்றாய்க் கூட்டி அஹ்மதென்னுந் திருநாமத்தையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைப் பார்த்துத் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை விரும்பாதவனான அந்தக் ககுபென்பவனது பிராணனை விரைவிற் குறையும் வண்ண முற்றுவித்து இவ்விடத்தில் வந்து சேருவே னென்று கூறினார்கள். தஞ்சமென்று சொல்லி இப்பூபாரத்தைப் பொறுத்தவர்களான அந்நாயகமவர்கள் அவ்வார்த்தைகளைத் தெரிந்து அதைச் சம்மதமென்று சொன்னார்கள்.

 

4088.  நன்றுநீர் மொழிந்த தாயினு மடியே

          னாவினாற் றேவரீர் மேலுங்

     கன்றிய மனத்தோ டருங்குறை யியம்பிக்

          களைகுவன் கொடுமை யனாவி

     வென்றியாம் படிக்குத் திருவுள மருளி

          விடைகொடுத் தனுப்பவும் வேண்டு

     மென்றனர் சல்மா வெனுமுயிர்த் தோழ

          ரீன்றருள் முகம்மதென் பவரால்.

37

     (இ-ள்) அவ்வாறு சொல்ல, சல்மா றலி யல்லாகு அன்கு என்று சொல்லும் தங்களது பிராண நேசரானவர் பெற்றருளிய முகம்மது றலியல்லாகு அன்கு என்னும் நாமத்தை யுடையவர்களான அவர்கள் நீங்கள் சொல்லியது நன்மையை யுடையதே, ஆனாலும் தொண்டனாகிய யான் எனது நாக்கினால் தேவரீரான தங்கள் மீதுங் கோபத்தைக் கொண்ட இதயத்தோடும் அரிய குற்றங்களைச் சொல்லி அந்த குரூரனாகிய ககுபென்பவனது பிராணனை யகற்றுவேன். அஃதை வெற்றியாகும்படிக்குத்