பக்கம் எண் :

சீறாப்புராணம்

1489


இரண்டாம் பாகம்
 

கலவைச் சாந்தினது விளக்கத்தைக் கொண்ட பெரிய விசாலமான புயங்களில் மதுவைப் பொருந்திய மாலைகளைப் பூண்டு சிங்கத்தைப் போலு மிருந்தான். தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய அந்த முகம்மது றலியல்லாகு அன்கு அவர்களும் அவனது முன்னர்ப் போய் நெருங்கினார்கள்.

 

4093.  காண்டனன் முகத்தை நோக்கின னெடிய

          கைகுவித் திருமிரு மெனலும்

     பூண்டவெந் துயரின் வாடிய பெயரைப்

          போலவு மிகமிக மொடுங்க

     நீண்டவெம் மூச்சு மடிக்கடி யுயிர்த்து

          நினைவினை யடக்கிமுற் சமயம்

     வேண்டின னிறுதி யோலைகொண் டுவந்த

          வீரரு மோரிடத் திருந்தார்.

42

     (இ-ள்) அவ்வாறு நெருங்க, அந்தக் ககுபென்பவன் பார்த்து முகத்தை நோக்கி நீண்ட கையைக் குவியச் செய்து வணங்கி இருங்கள்! இருங்கள்!! என்று சொன்ன மாத்திரத்தில், தாங்களணிந்த வெவ்விய துயரத்தினால் மெலிந்த ஜனங்களைப் போலவும் மிகவும் வதனமானது ஒடுங்கும் வண்ணம் நீளமாகிய வெவ்விய சுவாசத்தையு முடனைக்குடன் விட்டுத் தங்கள் சிந்தனையை மனதின்கண் அமைத்துக் கொண்டு முன்னுள்ள தனது மார்க்கத்தை விரும்பினவனான அந்தக் ககுபென்பவனது சாவோலையைக் கொண்டு வந்த வீரராகிய அம்முகம்மது றலியல்லாகு அன்கு அவர்களும் ஓர் பக்கத்தி லிருந்தார்கள்.

 

4094.  அடையலர் தமக்கோர் கொடுமைசெய் யிடியே

          யருங்குபி ரவர்களுக் கரசே

     குடிபுறந் தழுவுந் தடக்கையங் களிறே

          கோனிலைக் குரியவெங் கோவே

     வடவரைக் குவடு சாயினுஞ் சாயா

          மனநிறைந் தெழுமதி மலையே

     மிடிமையின் றமியேன் மொழிசெவி கேட்ப

          வேண்டுமென் றுரைவிளம் புவரால்.

43

     (இ-ள்) அவ்வாறிருந்த அவர்கள் சத்துராதிகளாகிய மயில்களுக்கு ஒப்பற்ற பொல்லாங்கைப் புரிகின்ற இடியானவரே! அருமையான காபிர்களுக்கு அரசரானவரே! தமது குலத்தின் புறத்தைத் தழுவா நிற்கும் பெரிய கையையுடைய அழகிய யானையானவரே! செங்கோல் நிலைமைக்குச் சுதந்திரரான எமது மன்னரானவரே! மகா மேருப் பருவதத்தின் சிகரமானது சாய்ந்தாலுஞ் சாயாத மனத்தினிடத்துப் பூரணமா யோங்கா நிற்கு