இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும்,
அறிவையுடைய முகம்மதே! அவன் இதுவே பத்தி யென்று சொல்லி காரண மென்றோர் பாசுரத்தினால் யாவரையுங்
கட்டித் துணிகளையும் பற்பல இரத்தினங்களோடும் திரவியங்களையும் விவகாரத்தோடுங் கணிதத்தோடும்
பறித்துப் பிரதிதினமுங் கெடச் செய்வான். பந்துக்கள் மீதுள்ள விருப்பமாகிய எண்ணமு மொழியும்
வண்ணம் நமது அறிவையுங் கலையச் செய்வான். கடைசியிலும் நம்மை அழைத்துப் போய் நாம்
விரும்பாத நரக லோகத்திலும் விடுவான். இதை நீர் தெரிவீராக.
4102.
தெள்ளிய மதியோ யான்சொலும் வார்த்தைச்
செயமலாற் றீதெனப் போகா
துள்ளுறை யறியாய் துன்புவந் தின்னு
முலைப்பது பின்னரிற் காண்பா
யெள்ளிநா னுரைப்ப தென்கொலா கையினா
லியம்புவ திருக்கவென் னிடத்திற்
றள்ளருந் துயரந் தாங்கிநீ வந்த
தன்மையை யுரையென வுரைத்தான்.
51
(இ-ள்) தெளிந்த புத்தியை
யுடைய முகம்மதே! நான் கூறும் சமாச்சாரம் வெற்றியையுடையதன்றித் தீமையையுடையதாகப் போகாது.
அந்த முகம்மதென்பவனது மனதின்கண் இருக்கப்பட்ட விஷயங்களை நீருணரமாட்டீர். இனிமேலும் துக்கமானது
வந்து உம்மை உலையச் செய்வதைப் பிற்பாடு தெரிவீர். நான் நிந்தித்துச் சொல்லுவது யாது? ஒன்றுமில்லை.
ஆகையால் நான் சொல்லுவது இருக்க, நீர் என்னிடத்தி லொழித்தற் கருமையான துன்பத்தைத் தாங்கிக்
கொண்டு வந்த வகையைச் சொல்லுமென்று கேட்டான்.
4103.
ஆலய மறந்த தீனுடை கபீபுக்
கன்பொடு முவப்பொடுஞ் சதக்காச்
சாலவு மருளிக் குடியொடி யானுஞ்
சஞ்சலம் புகட்டிய வணக்க
வேலையு மறந்து நும்மிடஞ் சார
வேண்டுமென் றெண்ணின னதற்குக்
காலினும் வலியோய் பதின்கலத் தவசங்
கடன்றர வேண்டுமென் றிசைத்தார்.
52
(இ-ள்) அவன் அவ்வாறு
கேட்க, ஆலயங்களை மறந்து தீனுல் இஸ்லாமென்னு மார்க்கத்தை யுடைய ஹபீபென்னுங் காரணப் பெயரைப்
பெற்ற அந்த முகம்மதென்பவனுக்கு அன்புடனு மகிழ்ச்சியுடனுஞ் சதக்காவை மிகவுங் கொடுத்து எனது குலத்தோடு
நானும் கவலையை யருத்திய தொழுகையாகிய தொழிலையு மறந்து தங்களிடத்தில் வந்து சேரவேண்டுமென்று
|