பக்கம் எண் :

சீறாப்புராணம்

1494


இரண்டாம் பாகம்
 

கருதினேன். அதற்காகக் காற்றைப் பார்க்கிலும் வலிமை யுள்ளவரே! நீர் பத்துக்கலத்தானியம் எனக்குக் கடனாகத் தரவேண்டு மென்று சொன்னார்கள்.

 

4104.  சொல்லினை யுணர்ந்து நீமன மகிழ்ந்து

          தொன்னெறிப் படிகரம் பிடித்த

     வில்லவ டனையென் னிடத்தினி லினிதி

          னீடுவைத் திடினுரைப் படியே

     யொல்லையிற் றருவ னுறுதியென் றுரைத்தா

          னுமியொடு கரியைவைத் தூதுங்

     கொல்லுலை வடிவேல் விட்டெறிந் தனபோற்

          கொடுநர கினிற்குடி புகுவான்.

53

     (இ-ள்) கொடிய நரக லோகத்திற் குடியாகப் புகுதுவோ னாகிய அந்தக் ககுபென்பவன் அவர்கள் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளைத் தெரிந்து உமியுடன் கரியை வைத்து ஊதுகின்ற கொல்லனது உலையிற் செய்த கூர்மை தங்கிய வேலாயுதத்தை விட்டு வீசினாற் போலும் நீர் உமது இதயமானது மகிழ்ச்சி யடையப் பெற்று ஆதியிலுள்ள மார்க்கப் படிக் கைப்பற்றிய உமது மனைவியை இனிமையோடும் என்னிடத்திற் பணயமாக வைப்பீரே யானால் நான் உமது சொற்படி விரைவில் நீர் கேட்ட தானியத்தைத் தருவேன். இது சத்தியமென்று சொன்னான்.

 

4105.  நிறையினிற் பொறையி னினைவினின் மான

          நிலைமையிற் புகழினி லருளி

     லறிவினிற் பொருவி லாதமெய்ப் பெரியோ

          யவமொழி யாவரு மறியக்

     குறைபட வுரைத்தீர் சொல்வதன் றென்றார்

          கொடியவன் கேட்டுவந் தீன்ற

     சிறுவர்க ளவரை யாயினு மென்ற

          னிடத்தினிற் சேர்த்தியென் றுரைத்தான்.

54

      (இ-ள்) அவன் அந்தப்படி சொல்ல, அவர்கள் மாட்சிமையிலும் பொறுமையினது கருத்திலும் அபிமானத்தினது நிலைபாட்டிலுங் கீர்த்தியிலுந் தயவிலும் புத்தியிலும் ஒப்பில்லாத உண்மையான பெரியவரே! எல்லாருந் தெரியும்படி இழிவுண்டாகும் வண்ணம் வீணான வார்த்தைகளைச் சொன்னீர். நான் இதற்குப் பதிலாகச் சொல்லுவது யாது. ஒன்றுமில்லையென்று சொன்னார்கள். அவ்வார்த்தையைக் கொடுமையையுடையவனான அந்தக் ககுபென்பவன் கேள்வியுற்று நீர் விரும்பிப் பெற்ற சிறுவர்களை யானாலும் என்னிடத்தி லீடாகக் கொண்டு வந்து வையுமென்று சொன்னான்.