இரண்டாம் பாகம்
பாரெனுங் கரையி னிருட்பட மெறிந்து
படர்திரை செறிகடற் றடத்து
நீரிடை மறைய மூழ்கினன் சேந்த
நெடுங்கதிர்ப் பருதிவெய் யவனே.
57
(இ-ள்) அவர்கள்
அவ்வாறு எழும்பிச் செல்ல, அந்த வீரனாகிய ககுபென்பவனுந் தனது வீட்டின் கண் போய்
நுழைந்தான். அருமையான விரிந்த சிறகுகளை யுடைய பட்சிகளியாவுந் தங்கள் ஒலியுமொடுங்கப்
பெற்றுக் கூடுகளிலடையும்படி செந்நிறத்தைக் கொண்ட நீண்ட கிரணங்களையுடைய வட்ட வடிவைப்
பொருந்திய சூரியனானவன் தனது கிரணங்களாகிய ஆயிரங்கைகளையுஞ் சுருக்கிக் கொண்டு பூமியென்று
சொல்லுங் கரையினிடத்து அந்தகாரமாகிய படத்தை வீசிப் பரவிய அலைகள் மிகுத்த சமுத்திரமாகிய
பெரிய நீரின்கண் மறையும் வண்ண மூழ்கினான்.
4109.
ஆதவ னேக வுடுக்கண மனைத்து
மகலிரு விசும்பிடஞ் செறிய
வேதமுள் ளுறைந்த நாயனை பறுலின்
விதிமுறைத் தொழுகையை முடித்துக்
கோதறு மமுதத் தொடுமுண வருந்திக்
குற்றுடை வாளினை யேந்தி
மாதிரப் புயநன் முகம்மதைப் போற்றி
யெழுந்தனர் முகம்மதென் பவரால்.
58
(இ-ள்) அந்த முகம்மது
றலியல்லாகு அன்கு என்பவர்கள் அவ்வாறு சூரியன் போக, நட்சத்திரக் கூட்டங்க ளியாவும் பரந்த
பெரிய ஆகாயத்தி னிடத்துச் செறியவும், வேதங்களினுட் டங்கிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவைப்
பறுலின் விதியினொழுங்கினால் தொழுகையை நிறைவேற்றிக் குற்றமற்ற சுவையுடன் ஆகாரமுண்டு
குற்றுடைவாளைக் கையினிடத்துத் தாங்கி மலையை நிகர்த்த தோள்களையுடைய நன்மை பொருந்திய நமது
நாயகம் நபிகட் பெருமானார் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்களைப் புகழ்ந்து எழும்பினார்கள்.
4110.
நட்பினுக் குரியோ ருயிரென வாய்ந்த
நால்வரைச் சடுதியி னழைத்துப்
பெட்புறக் கூட்டி யுடன் வேகிப்
பேதையன் மனைத்தலைக் கடையி
னுட்புறத் தொருபா லிருத்திமற் றவரு
மொருபுறத் திருந்துவெம் புலிபோற்
கட்புலன் கதுவா விருளினிற் போற்றிக்
ககுபெனக் கூவின ரன்றே.
59
|