பக்கம் எண் :

சீறாப்புராணம்

15


முதற்பாகம்
 

ஆன - அலி றலியல்லாகு அன்கு அவர்களின் அழகிய புதல்வர்களான, அசன் உசைன் உபயம் பாதம் - இமாம் ஹசன் ஹூசைன் றலி யல்லாகு அன்கு அவர்களினிரு சரணங்களையும், அனுதினம் மனதினில் ஓதுவாம் - எப்பொழுதும் யாம் இருதயத்தின் கண் துதிப்பாம்.

 

பொழிப்புரை

     துன்பமான தற்றுப் போகும்படி யுலகத்தின்கண் நியாயத்தினது சன்மார்க்க ஒழுங்குகள் அதிகரிக்கப் பிரதி தினமும் நம்மவர்களினாவிக்கு அருமையான காவலாகவும் சத்தியாநிற்கும் சமுத்திரத்தையுடைய பூமியின் மீது விளங்கும் வண்ணம் அரிதாகிய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தினது பொருந்திய கிரணங்களும் தோற்றமாகவும் மிகுந்த கீர்த்தியை உடைய அரசர்களான யானைகளுக்குச் சிங்கத்தை நிகர்த்த கஸ்தூரி வாசனையானது குலாவுகின்ற புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது நபியாகிய நாயகம் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் மருகராய் வாழ்ந்த அலிறலி யல்லாகு அன்கு அவர்களின் அழகிய புதல்வர்களான இமாம் ஹசன் ஹூசைன் றலி யல்லாகு அன்கு அவர்களினிரு சரணங்களையும் எப்பொழுதும் யாம் இருதயத்தின்கண் துதிப்பாம்.

 

வேறு

 

     14. ஆலகால வாரிபோலு மாகொடூர மாகிய

        காலகேள்வி தானடாத காரணீக ராளவே

        தாலமீதி லாதிதூதர் சாரமேவு வாழ்வினோர்

        நாலொடாறு பேர்கள்பாத நாவினாளு மோதுவாம்.

14

பதவுரை

      ஆலகால வாரி போலும் - விடச் சமுத்திரத்தைப் போலும், மாகொடூரம் ஆகிய - பெரிய கடுமையாகிய, காலம், கேள்வி தான் அடாத - கியாம நாளையினது கேள்விகள் அடாத, காரணீகர் - காரணீகத்தை யுடையவர்களும், தாலம் மீதில் - பூமியினிடத்து, ஆதி தூதர் - யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதர்களும், சார - பொருந்தும் வண்ணம், மேவு வாழ்வினோர் - மேவப் பெற்ற வாழ்வை உடையவர்களுமான உலுல் அஜூமிகளாகிய, நால் ஒடு ஆறுபேர்கள் - நான்குடன் ஆறான பத்துப் பேர்களும், ஆளவே - ஆட் கொள்ளும்படி, பாதம்நாளும் - அவர்களின் திருவடிகளைப் பிரதிதினமும், நாவின் ஓதுவாம் - யாம் நாக்கினாற் துதிப்பாம்.