பக்கம் எண் :

சீறாப்புராணம்

1523


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அன்றியும், குதிரைகள் பாய்ந்து சென்றன. கொடிகளசைந்து பறந்தன. குடைகள் ஆகாயத்தின் கண் தோய்ந்தன. தௌறாத்து, இஞ்சீல், சபூர், புறுக்கானென்னும் நான்கு வேதங்களினது வசனங்களும் நான்கு பக்கங்களிலும் விளங்கின. ஆயுதங்களொன்றோடொன்று பொருந்தித் தேய்ந்தன. தண்டிகைகளெவ்விடத்துஞ் சிறந்தன. யுத்தத்தினால் மேன்மையுற்ற வீரர்களாகிய சஹாபாக்களினது பாதங்களி லிருந்துண்டாகுந் தூசிகளானவை எண்டிசைகளையு மூடின.

 

4181.  செறுத்தடர்த் தானை மீதிற் சென்றுசென் றெதிர்த்தோர் மார்பை

     யறுத்தறுத் துதிரச் சேறுண் டனல்குடி யிருந்த வெள்வேல்

     பொறுத்தன தடக்கை கண்கள் புகைந்தன சினமேற் கொண்டு

     கறுத்தன தீன ருள்ளங் கலங்கின காபிர் நெஞ்சம்.

4

     (இ-ள்) தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தையுடைய முஸ்லிம்களது பெரிய கைகள் யானையின் மீது கோபித்து நெருங்கிப் போய்ப் போய் எதிர்த்தவர்களான சத்துராதிகளது நெஞ்சத்தை மிகவுமரிந்து இரத்தத் சேற்றை யருந்தி வெப்பமானது குடியிருக்கப் பெற்ற விஜயத்தைக் கொண்ட வேலாயுதத்தைத் தாங்கின. அவர்களது கண்கள் புகைந்தன. அவர்களது மனமானது கோபத்தை யதிகமாகக் கொண்டு கறுத்தன. காபிர்களாகிய சத்துராதிகளினது இதயங்களஞ்சின.

 

4182.  கண்ணறு சீற்ற முட்கொண் டெழுந்ததீ னவர்க ளெங்கு

     மண்ணிடஞ் செறிந்து செல்ல வாய்மையே சிரசிற் சூட்டு

     முண்ணிறை யுடைய வேந்த ரொண்டிறற் பரியிற் சூழக்

     எண்ணகன் ஞாலங் காக்குங் காரணத் தூதர் போந்தார்.

5

      (இ-ள்) அவ்வாறு அஞ்ச, மனத்தின் கண் கணக்கற்ற கோபத்தைக் கொண்டெழும்பிய தீனுல் இஸ்லாமென்னு மெய்ம்மார்க்கத்தையுடைய சஹாபாக்கள் பூமியின் கண் எவ்விடத்தும் நெருங்கிச் செல்லவும், சத்தியத்தையே தலையின் கண் பூணா நிற்கும் உண்மையான தைரியத்தை யுடைய அரசர்கள் வலிமையைக் கொண்ட ஒள்ளிய குதிரைகளிற் சூழவும், இடமகன்ற இவ்வுலகத்தைக் காக்கா நிற்குங் காரணத்தையுடைய றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா ஹபீபுறப்பில் ஆலமீன் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் போனார்கள்.

 

4183.  அரிவையர் மனத்தை யொத்துள் ளலைசெறி தடமு மற்று

     மருமணங் கமழ்மெய்த் தூதர் மனமெனக் குளிர்ந்த காவுங்

     கருதலர் நெஞ்சிற் றீய்ந்து கனலெழுஞ் சுரமு நீந்திப்

     பொருபடைப் புணரி யோடு நசுதெனுந் தலத்திற் புக்கார்.

6