பக்கம் எண் :

சீறாப்புராணம்

1526


இரண்டாம் பாகம்
 

ளியாவையு மடியோடு மில்லாமற் செய்வதற்கு இப்பொழுதே வேளையானது வந்து உதவிற்றென்று சொல்லி இருகண்களினது கடைகளுஞ் செந்நிற மடையப் பெற்றுச் சென்றான்.

 

4189.  கடிதினிற் போவான் றத்தங் காபிரை நோக்கி வீரம்

     வடிவெடுத் தனைய மான மன்னர்காள் விசய வாகை

     குடிபுகுந் திருந்த திண்டோட் குரிசில்காண் மனத்திற் றூக்கி

     யடியனேன் கூறு மாற்றங் கேண்மினென் றறைகு வானால்.

12

      (இ-ள்) அவ்வாறு விரைவிற் சென்ற அந்த வீரன் தனது காபிர்களைப் பார்த்து வலிமையானது ஒருவடிவத்தை யெடுத்தாற் போலும் வந்த அபிமானத்தையுடைய அரசர்களே! வெற்றியின் மாட்சிமையானது வாசமாகப்புகுந் திருக்கப் பெற்ற திண்ணிய புயங்களை யுடைய வேந்தர்களே! நீங்கள் அடியே னாகிய யான் சொல்லும் வார்த்தைகளை இதயத்தின் கண் சீர்தூக்கிக் கேளுங்க ளென்று சொல்லுவான்.

 

4190.  வந்தவெம் புதிய மார்க்க முகம்மது முதன்மற் றுள்ளோர்

     பந்தனை யாக யாரும் படைக்கலன் றுறந்து மோனஞ்

     சிந்தையி னமைத்து வேறு தெரிந்திடை நோக்கா வண்ணஞ்

     சுந்தரச் சென்னி மண்ணிற் றோய்வுறத் தொழுது நின்றார்.

13

      (இ-ள்) இங்கு வந்த கொடிய நூதன சமயத்தையுடைய அந்த முகம்மதென்பவ னாதியாக மற்றுள்ள ஜனங்க ளியாவருங் கட்டுப்பாடாய்த் தங்களது யுத்தாயுதங்களை யொழித்து மனத்தின் கண் மௌனத்தை யமையச் செய்து மற்றவைக ளொன்றையுங் குறித்துப் பக்கங்களிற் பார்க்காதபடி அழகிய தலையானது பூமியில் தோயும் வண்ணந் தொழுது நிற்கின்றார்கள்.

 

4191.  இருதிறத் தவரும் போரி லெய்துவ தென்கொல் வீணின்

     பெருமையி னின்ற தெய்வம் பிரித்தது காணு மின்னே

     வரிசிலை யழவ ரோடும் போயவன் வணங்கு வோரைக்

     குருதிநீர் படியிர் சிந்தக் கோறலே யழகி தென்றான்.

14

     (இ-ள்) இரண்டு பக்கத்தார்களும் வீணாக யுத்தத்தி லொருவருக் கொருவர் பொருந்தி எதிர்த்து யுத்தஞ்செய்வது ஏன்? அதைப் பெருமையோடும் நின்ற நமது தெய்வமானது விலக்கிற்று. ஆதலால் இப்பொழுதே நாம் நீண்ட கோதண்டத்தைத் தாங்கிய வீரர்களோடும் அங்குச் சென்று அவ்வாறு தொழுகின்ற அவர்களை அவர்களது இரத்த நீரானது பூமியிற் சிந்தும் வண்ணங் கொல்லுவதே முறைமை யென்று சொன்னான்.