பக்கம் எண் :

சீறாப்புராணம்

1533


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு வந்துசேர, அது ஜலங்காய்ந்து சூடு பரவி மர நிழலில்லாமற் பூமி அடியோடு மிகவும் வெடித்துக் கமர்கள் நிறைந்து சர்ப்பங்க ளதிகரித்து வெளியில் கானல் நெருங்கிச் சுழல் காற்றானது தொடர்ந்து உலாவுகின்ற ஆகாயத்தின்கண் ஓங்கி வளருங் கொடிய வெவ்விய வனதேவதைகள் அதிகரித்து விளையாட்டுகள் மிஞ்சிய பாதமானது படுதற் கருமையான காடாக விருந்தது.

 

4210.  காரை யும்பெரிய வாகை யுந்திருகு கள்ளி யுமரிய வெள்ளிலும்

     வீரை யுங்கரிய வோமை யுந்நெடிய வேர லுமுதிய சூரலுஞ்

     சீரை யுஞ்சிறிய பூளை யுஞ்சினைய மரவ மும்பசிய குரவமும்

     பாரு ணின்றுலவை யோடெ ரிந்துநிறை பத்திரங்களு முதிர்த்தவால்.

33

      (இ-ள்) அன்றியும், காரை மரங்களும் பெரிய வாகை மரங்களும் திருகு கள்ளிகளும் அரிய விளாமரங்களும் வீரைமரங்களும் கருநிறத்தைக் கொண்ட மாமரங்களும் நீட்சியையுடைய மூங்கில்களும் முற்றிய பிரம்புகளும் சீரைகளுஞ் சிறுமையைக் கொண்ட பூளைகளுங் கிளைகளையுடைய குங்கும மரங்களும் பசுமையான பேரீத்த மரங்களும் இப்பூமியின் கண் நின்று கிளைகளோடும் வெந்து அற்று அம்மரங்களில் நிறைந்த இலைகளையுஞ் சிந்தின.

 

4211.  சூடு சுட்டுமிக வேகு தித்துமறி சோப முற்றடிகள் பாவமா

     பாடு பட்டுவெளி யோடி யெய்த்துவெகு பார்வை யுற்றிடையு மேகொலோ

     கோடு பட்டுமலர் காயு திர்த்துவிளை கூவ லற்றுவிடு வேரொடும்

     வாடு பட்டுலர வேமி குத்ததரு மாறு பட்டதவ் வனத்தரோ.

34

     (இ-ள்) அன்றியும், அக்காட்டில் மான்கள், வெப்பத்தாற் சுடப்பட்டு அதிகமாகச் சாடி ஆயாசமடைந்து தங்களது பாதங்களைப் பூமியில் வைப்பதற்கு மிகவும் வருத்தப்பட்டு வெளியே விரைந்து சென்று இளைத்து அதிகக் கவனமுற்று இடையா நிற்கும். அதிகரித்த மரங்கள் தங்கள் கிளைகளெல்லாங் கரிந்து புஷ்பங்களையுங் காய்களையுஞ் சிந்தி விளைகின்ற நீர்ப்பள்ளங்க ளில்லாமல் விட்ட வேருடன் வாடுதலடைந்து காயும் வண்ணம் வேறுபட்டன.

 

4212.  செந்த ரைப்படு நிலஞ் சுடக்கழுகு சேன மென்பதடி வைத்திடா

     தந்த ரத்தினி லெழுந் தகட்டினி லடித் தடிக்கடி பறந்தன

     சுந்த ரக்கரி நெடுங் கயத்தொடு சுருண்டு வெந்துடல் சுரித்தன

     வந்துகானல்சுட வாசை யானைமுக மாறு கொண்டுபுற மிட்டவால்.

35