இரண்டாம் பாகம்
4215.
பீடு கொண்டபுவி மாது வெம்பரல் பிறங்கு செந்தழல் வெதுப்பினா
லாடை யென்றுமிகு தண்மை யெய்தவுவ ராழிவேட்டுற வணிந்தனள்
கோடு கின்றதுளை மூர னெட்டுடல் குழைத்திவ் வெம்மையி ணுணங்கிவெஞ்
சேட னுந்தலைவெ டித்தொ ராயிரமுஞ் சென்னி யென்னவகி ருற்றனன்.
38
(இ-ள்) அன்றியும்,
வெவ்விய அந்தப் பருக்கைக் கற்களிலிருந்து சுவாலிக்கின்ற சிவந்த அக்கினியினது சூட்டினால்,
பெருமையைக் கொண்ட இந்தப் பூமியாகிய பெண்ணானவள் தனக்கு வத்திரமென்று சொல்லி மிகுந்த
குளிர்ச்சியானது பொருந்தும் வண்ணம் உவர்ப்பையுடைய சமுத்திரத்தை விரும்பி மிகவுந் தரித்தாள்.
வெவ்விய ஆதிசேடனும் இந்த வெப்பத்தினால் வாடித் துவாரங்களைக் கொண்ட வளைந்த பற்களை யுடைய
தனது நீண்ட சரீரத்தைக் குழையச் செய்து சிரமமானது பிளக்கப் பெற்றுத் தலைகள் ஓராயிரமென்று
சொல்லும் வண்ணம் வகிருற்றான்.
4216.
மங்கு லிற்றிரித ருங்க திர்ப்பருதி வான வன்கரமு மேபுகா
தங்கி யங்கடவுள் வெங்க தத்தொடு மடர்ந்து வந்தர சிருந்திடும்
பொங்கு கூளியிர தங்க ளல்லது பொருந்தி டாதபடு நிலமதிற்
றிங்கண் மெய்ப்புகழ் விளங்கு வள்ளனபி சேனை யங்கட னடந்ததால்.
39
(இ-ள்) அன்றியும்,
ஆகாயத்தின்கண் சஞ்சரிக்கின்ற ஒளிவைக் கொண்ட வட்டவடிவையுடைய சூரியனது கிரணங்களு மங்குச் செல்லா.
அழகிய முனியானது விரும்பி நெருங்கித் தங்கி வெவ்விய கோபத்தோடும் அரசாகவிருக்கும். இவ்வாறு
ஓங்கா நிற்கும் பேய்த்தேர்களன்றி வேறொன்றும் பொருந்தாத அந்தப் பாலைநிலத்தில் வளர்பிறை
போலும் உண்மையான கீர்த்தியானது விளங்கா நிற்கும் வள்ளலாகிய நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபிசெய்யிது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்களது சேனா சமுத்திரமானது நடந்தது.
4217.
வாயு லர்ந்துகுளிர் நாவ றந்துவெகு வாய்ம யங்கிவத னங்கரீஇக்
காய நொந்தருவி டாய்மி குந்துவரு காற ளர்ந்துளம் வருந்தியே
யாய வெங்குபிர் துடைத்து வண்புக ழடைந்த தீனவர்க ளியாவருந்
தீய வன்சுர மகன்றி ருந்ததொரு சிறிய கானிடை யிறங்கினார்.
40
(இ-ள்) அவ்வாறு நடந்து
தங்களுக் கெதிரான வெவ்விய காபிர்களை வதைத்து வண்மையைக் கொண்ட கீர்த்தியைப் பெற்ற
|