பக்கம் எண் :

சீறாப்புராணம்

1602


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அவ்வாறு சொல்லிய அந்தச் சமாச்சாரத்தை அந்நபிகட் பெருமானவர்கள் கேட்டு நல்லதென்று சொல்ல, அசுஹாபிமார்களியாவரும் அவ்விதஞ் செய்ய முயன்று மேகங்கள் உலாவா நிற்குங் கைகளை யுடைய தெய்வீகந் தங்கிய அந்நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கூட வரும் வண்ணம் ஒன்று கூடி எல்லை காண்பதற் கருமையான செல்வத்தைக் கொண்ட அந்தத் திருமதீனமா நகரத்தின் வெளியிற் சென்று வருத்தமின்றிப் பூமியைத் தோண்டுவதற்கு ஆரம்பித்தார்கள்.

 

4402. மட்டி லாதகல் வெட்டிய நீண்டகை வாய்ந்த

     கொட்டு மேய்ந்துகூந் தாலமும் பலபல கொணர்ந்து

     வெட்டு வாரவை யடிக்கடி கூடையின் வீழ்த்தித்

     தட்டு வார்பல திடரென முறைமுறை தாங்கி.

47

     (இ-ள்) அவ்வாறு ஆரம்பித்துச் சிலர் கணக்கின்றி அகழ்கள் வெட்டிய நீட்சியைக் கொண்ட கைகளாற் சிறக்கப்பட்ட பற்பல மண்வெட்டிகளையும் கூந்தாலிகளையும் பொருந்திக் கொண்டு வந்து வெட்டுவார்கள். சிலர் அந்த மண்ணை அடிக்கடி கூடையில் விழுவித்துத் தலையினாற் சுமந்து பலதிடர்க ளென்று சொல்லும் வண்ணம் வரிசைவரிசையாகத் தட்டுவார்கள்.

 

4403. ஒருவர்க் கீரிரண் டெனமுழ மாகவுள் ளுவப்பச்

     செருகி யீரைந்து மைந்தர்கள் வகைவகை திரண்டங்

     கரிய நாயனைப் புகழ்ந்துநல் பயித்துக ளறைந்து

     விரிவு மாழமும் பெறமுறை யெடுத்தனர் விரைவின்.

48

     (இ-ள்) அவ்வாறு ஒருவர்க்கு நான்கு முழமென்று சொல்லும்படியாக மனமானது மகிழ்ச்சி யடையும் வண்ணம் பப்பத்து அசுஹாபிமார்கள் ஒவ்வொரு கூட்டமாகக் கூடி ஒருவரோடொருவர் நெருங்கி அவ்விடத்தில் தரந்தரமாக அருமையான நாயகனாகிய ஹக்குசுபுகானகுவத்த ஆலாவைத் துதித்து நல்ல பைத்துகளென்னுங் கவிகளைப் பாடி அகலமுந் தாழ்வு முண்டாகும் வண்ணம் வரிசையாக மண்ணைத் தோண்டி யெடுத்தார்கள்.

 

4404. ஊறு நீர்ப்புறங் காணுறத் தோண்டலு மொருகற்

     பாறை மாமலை முளைத்தெனத் தோன்றின படியின்

     வீறு மேவிய கரத்தினர் திடத்தொடும் வெகுண்டு

     கூறு செய்திட நின்றன ராங்கது குறுகி.

49