பக்கம் எண் :

சீறாப்புராணம்

1609


இரண்டாம் பாகம்


(இ-ள்)
அவ்வாறு வைத்து அங்கு வந்து நெருங்கி யிருந்த முஸ்லிம்களாகிய யாவரையுங் கூட்டங் கூட்டமாக வரிசையாய்க் கையினிடத் தெடுத் துண்ணுங்க ளென்று இனிமையோடுங் கூற, முறை முறையாக அரசர்களான அந்த அசுஹாபி மார்களும் விருட்சத்தோடு பேசிய மேலான குணத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் அவ்வாகாரத்தை யருந்தும்படி யாரம்பித்தார்கள்.

 

4423. அப்ப வர்க்கமு மெடுத்தெடுத் தளித்தலே வேலை

     வெப்பு றும்பசி யறவிவ ரருந்தலே வேலைச்

     செப்புந் தாழியிற் கறிநனி சிறத்தலே வேலைத்

     தப்பி லாமொழித் தூதர்தங் காட்சியின் றகைமை.

68

     (இ-ள்) அவ்வாறு ஆரம்பிக்க, குற்றமற்ற வார்த்தையை யுடைய றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் செய்யிதுனா செய்யிதுல் குறைஷியா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது காட்சியின் தன்மையினால், அந்த அப்ப வருக்கங்களை எடுத்து எடுத்துக் கொடுத்தலே வேலையாகவும், வெம்மை மிகுந்த பசியானது இல்லாம லாகும்படி இந்த முஸ்லிம்களாகிய யாவருக்கு முண்ணுதலே வேலையாகவும், புகழா நிற்கும் அந்தத் தாழியி லிறைச்சியானது மிகவும் அதிகப் படுதலே வேலையாகவு மிருந்தன.

 

4424. கையும் வாரியுண் டோய்ந்தனர் வயிற்றொடு கமலச்

     செய்ய வாயுமங் கோய்ந்தனர் தின்பவர் திரிந்த

     துய்ய மைந்தரு மளித்தலுத் தோய்ந்தனர் சொரிந்த

     நெய்யில் வெங்கறி யிலட்டுக மோய்ந்தில நிறைந்த

69

     (இ-ள்) அவ்வாறிருக்க, அங்கே உண்ணுகின்ற அவர்களியாவரும் அவைகளை யள்ளி யருந்திக் கைகளு மோயப் பெற்றார்கள். வயிற்றுடன் தாமரை மலரை நிகர்த்த அழகிய வாய்களு மோயப் பெற்றார்கள். உண்பவர்களுக்கு இட்டுக் கொடுக்கும் வண்ணம் திரிந்த பரிசுத்தத்தையுடைய மாந்தர்களுங் கொடுத்துச் சலித்து ஓய்ந்தார்கள். சொரிந்த நெய்யினாற் செய்யப்பட்ட வெவ்விய இறைச்சியும் அப்பவருக்கமு மோயாததிகரித்தன.

 

4425. நிலைமை மன்னவ ராயிரம் பெயரொடு நீண்ட

     வலகி லாத்திறன் மைந்தருந் தூதெனு மரியும்

     புலனுந் தேகமுங் களித்தெழில் சிறந்திடப் புசித்தார்

     பிலனும் வையமும் விசும்புமிக் கதிசயம் பிறப்ப.

70