பக்கம் எண் :

சீறாப்புராணம்

161


முதற்பாகம்
 

      சுந்தர வதன முஹம்மது நபியைத்

          துய்யவ னினிதுற வளர்த்தான்.

83

     (இ-ள்) அவ்வாறாகச் சந்திரனானது ஆகாயத்தின் கண்ணிருந்து இறங்கிவந்து பூங்கொத்தாலான மாலை சூடிய கூந்தலையுடைய ஹலிமா அவர்களின் வீட்டில் தங்கி நபிகள் பிரானவர்களின் தாமரைமலர் போலும் பாதங்களைத் தடவி இரா முழுவதுங் காத்து இனிதாக விருந்து அவ்வீடு முழுவதும் பெருகிய செழுமையான கிரணங்களைப் பரப்பவும், அதோடு கூடி தேவர்களான மலக்குகள் வந்து எள்ளிடுதற் கிடமின்றி நெருங்கி வீட்டினது பக்கத்தில் காவல் செய்திருக்கவும், பரிசுத்தமான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் அழகிய முகத்தையுடைய நபி முஹம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை இனிமை பொருந்தும்படி வளர்த்தான்.

 

     374. வரையெனத் திரண்ட புயநபி நயினார்

             முகம்மதை வளர்த்திடு மனைக்குட்

        கரையிலாச் செல்வந் தனித்தனி பெருகிக்

             காட்சிகள் பலவுண் டாகி

        நிரைநிரை மாடா பொட்டகம் பலவு

             நிறைந்துபா றயிர்குறை விலதாய்த்

        தரையினிற் குடிக்குட் பெருங்குடி யான

             தலைவனா ரீதென விருந்தான்.

84

     (இ-ள்) மலைபோலும் திரட்சியுற்ற புயங்களையுடைய நபிகள் பெருமான் முகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களை வளர்த்து வராநிற்கும் அந்த ஹலிமா அவர்களின் வீட்டினுள் எல்லையில்லாத சம்பத்துத் தனித்தனியாக நிறைந்து அதிசயங்களும் அனேகமுண்டாகி வரிசை வரிசையாக மாடுகளும் ஆடுகளும் ஒட்டகங்களும் மற்றும் பலவைகளும் பெருகிப் பால் தயிர் முதலியன குன்றுபாடில்லாததாய் இப்பூமியின்கண் சகல குடிகளுக்குள்ளும் பெரிய குடியானது. அதனால் ஆரிதவர்கள் யாவர்கட்கும் தலைவரென்று சொல்லும்படி பெயர்பெற்று இருந்தார்கள்.

 

     375. குனையினி லலிமா மக்களுந் தானுங்

             குடிக்குயர் குடியென வாழு

        மனையினி லொருநாட் டீபமிட் டதுமில்

             முகம்மது பேரொளி யல்லாற்

        றனியவ னருளாற் றுன்பநோய் வறுமை

             தனையடுத் தவர்க்குமில் லாமற்

        சினவுவேற் கரத்த னாரிது மகிழ்ந்து

             செல்வமுஞ் செருக்கும்பெற் றிருந்தான்.

85