பக்கம் எண் :

சீறாப்புராணம்

1612


இரண்டாம் பாகம்
 

4431. காலி னாற்றரை நடந்துடன் முறுக்கியுட் கவிந்த

     தோலு டைச்செவி யசைத்தசைப் போட்டுவாய் துவளும்

     வாலி னைப்பைய வாட்டிவா யெனத்தொனி வழங்கிப்

     பாலி னின்றது முன்னுருப் போன்றெழும் படிமை.

76

     (இ-ள்) அன்றியும், ஆதியி லிருந்த வடிவத்தைப் போன்று எழும்பிய அவ்வாடானது தனது பாதங்களினாற் பூமியின் மீது நடந்து சரீரத்தைத் திருகச் செய்து உள்ளே கவிந்த தோலையுடைய காதுகளையாட்டி வாயை அசைபோட்டுத் துவளா நிற்கும் வாலை மெல்ல அசைத்து வாயென்ற சத்தத்தைத் தந்து பக்கத்தில் நின்றது.

 

4432. நின்ற மையினை நடத்தியுட் களிப்பொடு நினது

     வென்றி வாழ்மனை யிடத்தினி லேகென விரிப்ப

     நன்று நன்றெனக் கரத்தினிற் பிடித்தில்ல நாடிச்

     சென்று புக்கின ராரண மனைத்தையுந் தெருண்டோர்.

77

     (இ-ள்) அவ்வாறு நின்ற ஆட்டை நடத்திக் கொண்டு மனமகிழ்ச்சியோடும் நீர் உமது விஜயத்தையுடைய வாழா நிற்கும் வீட்டின்கண் செல்லுமென்று நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் விரித்துச் சொல்ல, வேதங்க ளியாவையு முணர்ந்தவர்களான அந்தச் சாபிறு றலியல்லாகு அன்கு அவர்கள் நல்லது! நல்லதென்று சொல்லி அவ்வாட்டைக் கையிற்பிடித்துக் கொண்டு வீட்டை விரும்பி நடந்து வந்தார்கள்.

 

4433. வந்த போதினின் மனைமண வாளனை நோக்கி

     யந்த மும்பெறு முயர்ச்சியு நிறமுநீ ளடியு

     நந்தம் வீட்டினி லிருந்தமை யெனத்தனி நணுகி

     யுந்தி நின்றதிங் கேதென வதிசயித் துரைத்தாள்.

78

      (இ-ள்) அவ்வாறு வந்த சமயத்தில், அவர்களது நாயகியவர்கள் தங்கள் நாயகரவர்களைப் பார்த்து அழகினாலும், பெறா நிற்கும் உயரத்தினாலும், நிறத்தினாலும், நீண்ட பாதங்களினாலும் இவ்வாடானது நமது வீட்டிலிருந்த ஆடென்று ஒப்பற நெருங்கி இங்கே ஓங்கி நின்ற இவ்வாடானது யாது? என்று ஆச்சரிய முற்றுக் கேட்டார்கள்.

 

4434. வடித்த தீனினை வானரு மனமகிழ் வுறவைத்

     தெடுத்த தூதுவ ராருயிர் கொறியினுக் கினிதின்

     விடுத்தி யாவரு மதிசயம் பெறப்புவி விளங்கக்

     கொடுத்த தீதென வுரைத்தனர் கோளரி யனையார்.

79