பக்கம் எண் :

சீறாப்புராணம்

1613


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு கேட்க, ஆண் சிங்கத்தை நிகர்த்தவர்களான அந்தச் சாபிறு றலியல்லாகு அன்கு அவர்கள் தெளித்த தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தைத் தேவர்களான மலாயிக்கத்துமார்களும் உள்ளக்களிப்பான தடையும் வண்ணம் வைத்துப் பொறுத்த றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இனிமையோடும் அருமையான பிராணனை ஆட்டிற்குவிட்டு எல்லாரும் ஆச்சரியமுறவும், இவ்வுலகமானது விளக்கமுறவுங் கொடுத்தது இதுவென்று சொன்னார்கள்.

 

4435. கூறு நல்லுரை கேட்டகங் குளிர்ந்தெந்த நாளுந்

     தேறி லாதியா னிருந்தனன் றிடம்பெற வின்னே

     பேறு கொண்டநன் னபியெனத் தெளிந்தனன் பெரியோன்

     வீறு காணென மதித்துரைத் தனள்விருந் தனையே.

80

     (இ-ள்) அவ்வாறு அவர்கள் சொல்லிய நன்மை பொருந்திய வார்த்தைகளை அவர்களது நாயகியா ரவர்கள் காதுகளாற் கேள்வியுற்று மனமானது குளிரப் பெற்று யான் எந்தக் காலமுந் தெளியாம லிருந்தேன். இப்பொழுது தான் பதவியைக் கொண்ட நன்மை பொருந்திய நபியென்று உண்மையாகும்படி தெரிந்தேன். இது யாவருக்கும் மேலானவனான அல்லா ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் பெருமையாகுமென்று குறித்துச் சொன்னார்கள்.

 

4436. உரிமை யின்னன மகிழ்வுற சாபிரென் றோது

     மரிய வேந்தருந் தோழரு மருகினிற் சூழக்

     கரிய மைமுகி னிழற்றிடக் காரணங் காட்டும்

     பொருவி லாநபி கடலெனு மகழின்பாற் புக்கார்.

81

     (இ-ள்) அவர்களது நாயகியா ரவர்கள் இத்தன்மையாகச் சந்தோஷத்தை யடைய, சாபிர் றலியல்லாகு அன்குவென்று சொல்லும் அருமையான அரசரும் நேசர்களாகிய அசுஹாபிமார்களும் பக்கத்தில் வளைந்து வரும் வண்ணம் கருநிறத்தைக் கொண்ட அந்தகாரத்தையொத்த மேகமானது குடையாக நிழலைச் செய்யும்படிக் காரணங்களைக் காட்டா நிற்கும் ஒப்பற்ற நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சமுத்திரமென்று சொல்லும் அந்த அகழினிடத்துச் சென்றார்கள்.

 

4437. விரைந்து மன்னவ ரவரவர் தனித்தனி மேவி

     யரிந்து சூழகழ்க் கிடங்கினை யழகுறத் திருத்திச்

     சொரிந்த நீள்கரைப் புடவியும் வரையெனத் தோன்றத்

     திருந்த வேயமைத் தனர்குபிர் திருந்தலர் திகைப்ப.

82