பக்கம் எண் :

சீறாப்புராணம்

1614


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அவ்வாறு செல்ல, அரசர்களான அவரவர்கள் தனத்தனி யாகப் பொருந்தி வளைந்த அந்த அகழ்க்கிடங்கைக் காபிர்களாகிய சத்துராதிகளும் பிரமிக்கும்படி வெட்டி அழகானது பொருந்தும் வண்ணஞ் செவ்வைப்படுத்திப் பொழிந்த நீண்ட கரையைக் கொண்ட பூமியையும் மலையைப் போலுந் தோன்றும்படி செவ்வையாகச் செய்தார்கள்.

 

4438. ஆயி ரந்தலைச் சேடனுந் தெரிவுற வாழ்ந்த

     தூய பேரக ழியற்றியிங் கிருந்தனர் தொலையா

     மாய வெங்குபி ரிடையுழன் றறத்தினை வழுவித்

     தேயு மன்னவர் திறத்தினை யீதெனத் தெரிப்பாம்.

83

     (இ-ள்) அவ்வாறு அவர்கள் ஆயிரஞ் சிரங்களையுடைய ஆதிசேடனுந் தெரியும்படி தோண்டிய பரிசுத்தத்தைக் கொண்ட பெரிய அகழியையுண்டாக்கி இந்தத் திருமதீனமா நகரத்தின்கண் ணிருந்தார்கள். நீங்காத வஞ்சகத்தைக் கொண்ட வெவ்விய குபிர்மார்க்கத்தினிடத்து அலைந்து திரிந்து புண்ணியத்தை விட்டுந் தவறி மெலியா நிற்குங் காபிர்களாகிய அரசர்களது தன்மையை இதுவென்று யாம் சொல்லுவாம்.