பக்கம் எண் :

சீறாப்புராணம்

1618


இரண்டாம் பாகம்
 

     வெண்ணிறக் கவிகை நிழற்றிட நீண்ட

         விரிமரை யெறிதர விளங்கும்

     வண்ணவெந் திறலார் கறுபுவந் தீன்ற

          மைந்தனும் வாசிமேற் போனான்.

7

     (இ-ள்) அன்றியும், விளங்கா நிற்கும் அழகிய வெவ்விய வல்லமை நிறைந்த ஹறுபென்பவன் மகிழ்ந்து பெற்ற புதல்வனாகிய அபாசுபியானென்பவனுங் கல்லணைகள் அமைந்த ஐயாயிரங் குதிரைகள் நிறைந்து வரவும், பற்பல சைனியங்களுங் கூடி வரவும், கணக்கிடுதற் கருமையான குறைஷி மன்னவர்களும் திரண்டு வரவும், வீசுகின்ற பலவகை ஆயுதங்களைப் பூண்டு வெள்ளிய நிறத்தைக் கொண்ட குடையானது நிழலைச் செய்யவும், விரிந்த சாமரங்கள் வீசவும், குதிரையின் மீது சென்றான்.

 

4446. புதையிருட் படல மள்ளிவிட் டெறிந்து

         பொங்குசெங் கதிர்மணித் தாம

     மதியொளி பழுத்த தரளவெண் டொடையு

         மார்பகத் தணியவிண் கான்ற

     விதுவிளங் கதிரும் பருதியி னொளியும்

         விளங்கிய தெனும்படி சிறப்ப

     வதிதியர் சிவணப் போயினர் மற்ற

         வரசர்க ளீங்கிவ ரருகின்.

8

     (இ-ள்) அன்றியும், இங்கே இவர்களது பக்கத்தில் மற்ற வேந்தர்கள், புதைந்த அந்தகாரப் படலத்தை வாரிவிட்டு வீசி ஓங்கா நிற்குஞ் செந்நிறத்தைக் கொண்ட பிரகாசத்தையுடைய இரத்தினங்களாற் செய்யப்பட்ட மாலைகளையும், சந்திரப் பிரகாசத்தையொத்த ஒளிவானது முதிரப்பெற்ற வெள்ளிய முத்தினாற் செய்யப்பட்ட மாலைகளையும், மார்பினிடத்துத் தரிக்க, அவைகள் ஆகாயத்தின் கண் பிரகாசிக்கின்ற சந்திரனது இளம்பிரகாசமும், சூரியனது ஒளிவும் விளங்கினவென்று சொல்லும் வண்ணம் சிறக்க, பரதேசிகளை போலச் சென்றார்கள்.

 

4447. பூண்டவெந் தானை யறிந்திலர் கழுத்திற்

         போட்டநன் மணிவட முணரார்

     நீண்டநட் பினரைக் கண்டுமங் கறியார்

         நிகழ்த்திய மாற்றமு மறியா

     ரீண்டிய வேந்த ரியாவரென் றறியா

         ரெழுகடற் சேனையு மறியார்

     தூண்டிய சீற்றத் தீயொன்று தாங்கி

         யேகினர் மிடலுடைச் சூரர்.

9