பக்கம் எண் :

சீறாப்புராணம்

1619


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு செல்ல, வலிமையையுடைய வீரர்கள் தாங்கள் தரித்த ஆயுதங்களை யுணர்ந்திலர்கள். கழுத்தின்கண் பூண்ட நல்ல இரத்தினங்கள் பதித்த மாலைகளையு முணர்ந்திலர்கள். மிகுத்த நட்பையுடைய நேசர்களை அங்கே பார்த்தும் அவர்களை இன்னாரென் றுணர்ந்திலர்கள். அவர்கள் சொல்லிய வார்த்தைகளையு முணர்ந்திலர்கள். அங்கே கூடிய அரசர்கள் யாவரென்றுணர்ந்திலர்கள். ஓங்கா நிற்குஞ் சமுத்திரத்தை நிகர்த்த அந்தச் சைனியங்களையு முணர்ந்திலர்கள். தங்களை இவ்வா றெழுப்பிய கோபாக்கினியாகிய ஒன்றை மாத்திர மணிந்தவர்களாகச் சென்றார்கள்.

 

4448. தடத்தினுஞ் சாலி விளைதரு மிடத்துஞ்

         சந்தனக் காவினு மாலை

     யிடத்தினுங் குவளை யோடையின் மருங்கு

         மெழிறரு கிடங்கினு முயர்ந்த

     திடத்திணைச் சார்பு மெங்கணு மற்ற

         திசையினு மளவில தானை

     விடத்தினுங் கரிய மனத்தின ரோடும்

         விரைவொடுந் திரண்டெழுந் தனவால்.

10

     (இ-ள்) அன்றியும், கணக்கற்ற சைனியங்கள் விஷத்தைப் பார்க்கினுங் கருமையுற்ற இதயத்தையுடைய காபிர்களோடும் மலைகளினது பக்கங்களிலும் நெல்லானது விளைகின்ற வயல்களிலும், சந்தன மரங்களையுடைய சோலைகளிலும், ஆலைகளையுடைய இடங்களிலும், குவளைப் புஷ்பங்களைக் கொண்ட ஓடைகளின் கரைகளிலும், அழகைத் தருகின்ற குளங்களினது பக்கங்களிலும், ஓங்கிய வலிமையையுடைய திணைகளின் சார்புகளிலும், திசைகளிலும், மற்ற எல்லா விடங்களிலும் வேகத்தோடுங் கூடி யெழும்பிச் சென்றன.

 

4449. வாசியு மொருபான் மன்னரு மொருபால்

         வயங்கெழு மாந்தர்க ளொருபால்

     வீசிய நெடுங்காற் கொடிகளு மொருபால்

         விண்ணினிற் செறிகுடை யொருபா

     லோசையிற் கலித்த பல்லிய மொருபா

         லுலவிய சாமரை யொருபாற்

     றூசியு மொருபா லெனவறி யாது

         நெருங்கிய தொகுபடைக் கணமால்.

11

     (இ-ள்) அவ்வாறு எழும்பிக் கூடிய அந்தச் சைனியங்களின் கூட்டமானது குதிரைகளு மொருபக்கம், அரசர்களும் ஒரு பக்கம், வலிமை பொருந்திய ஆடவர்களும் ஒரு பக்கம், நீண்ட