பக்கம் எண் :

சீறாப்புராணம்

168


முதற்பாகம்
 

     388. ஆடவர் திலக னப்துல்முத் தலிபு

             மாமினா வெனுங்குலக் கொடியும்

        பீடுறு மலிமா தன்னையுந் தலைமைப்

             பெருமையா ரீதையும் போற்றி

        நாடுறு மனத்தா லினத்தவர் மனைக்கு

             ணன்குற விருந்துக ளளித்துத்

        தேடிய பொருளைக் கிடைத்தவர் போலச்

             செல்வமுற் றிருந்தனர் சிலநாள்.

98

     (இ-ள்) அது கேட்ட புருஷதிலகரான அப்துல் முத்தலி பவர்களும் ஆமினாவென்று சொல்லும் குலத்திற்கோர் கொடியானவர்களும் பெருமை பொருந்திய ஹலிமா அவர்களையும் தலைமைத் தனத்தினது மாட்சிமை தங்கிய ஆரிதவர்களையும் புகழ்ந்து விருப்பமுற்ற மனசோடும் தங்களின் பந்துக்களுடைய வீடுகளினகத்தில் நன்மையுறும்படி விருந்துகள் கொடுத்து நாடிய வஸ்துவைக் கிடைக்கப் பெற்றவர்கள் போலச் செல்வத்தை யடைந்து சிலதினம் இருந்தார்கள்.

 

     389. செவ்விய வரிசை மக்கமா நகரிற்

             றிங்கணா லிரண்டுசென் றதற்பின்

        னெவ்வரம் பினுக்கு மிகுவரம் பெனவா

             ழிலங்கிழை யாமினா தனையு

        மவ்வலந் தொடையா னப்துல்முத் தலிபு

             மன்னையும் பொருந்துறப் போற்றிக்

        கவ்வையங் கழனி குனையினிற் புகுதுங்

             கருத்தினைக் கருதியே யுரைத்தார்.

99

     (இ-ள்) ஹாரிதும் ஹலிமா அவர்களும் அவ்வாறு செவ்வையான சங்கை பொருந்திய திருமக்கமா நகரத்தின்கண் விருந்துண்டு கொண்டிருந்து எட்டுமாதங் கழிந்த பின்னர், எவ்வொழுங்கினுக்கும் மிகுந்தவொழுங்கென்று சொல்லும்படி வாழா நிற்கும் பிரகாசிக்கின்ற ஆபரணங்களையுடைய ஆமினா அவர்களையும் அழகிய பரிமளத்தையுடைய மாலையை யணிந்த அப்துல் முத்தலிபாகிய வேந்தரவர்களையும் பொருந்தும்படி புகழ்ந்து ஒலியானது மாறாத அழகிய வயல்களையுடைய தங்களது நகரமான குனையின் பட்டணத்திற்குச் செல்லும் அபிப்பிராயத்தை மனசின்கண் நினைத்து அவர்களுக்குச் சொல்லிக் காட்டினார்கள்.

 

     390. எண்ணரும் பெருமைப் புகழுசை னயினா

             ரெடுத்தியற் றியபல வரிசைப்

        புண்ணியப் பொருளாய் வருமபுல் காசீம்

             புந்தியி னடுவுறப் பொருந்திக்