பக்கம் எண் :

சீறாப்புராணம்

1788


இரண்டாம் பாகம்
 

நீங்காத மிகவும் இளமைப் பருவத்தையுடைய கன்றுகள் மேய்ந்து உறங்கா நிற்கும் பல மலைகள் கெடும் வண்ணம் உளியைப் போலுங் குடைந்து வெட்டிய வட்ட வடிவையுடைய வாயையும் உரலைப் போன்ற தலையையுமுடைய பன்றிகள் பொருதுகின்ற யானைகளை வருத்த, அதனால் விரிந்த கையையுடைய அந்த யானைகள் போகின்ற காடுகளையும் தாண்டினார்கள்.

 

4922. மழைசெறிந் திருண்டு கதிரவன் றோன்றா

         வனங்களும் புனங்களுங் கடந்து

     தழைசெறிந் திலங்கும் வாவியு மோடைத்

         தடங்களு நதிகளுங் குறுகி

     யுழையின மோடித் தவித்துளைந் தலைந்த

         வொண்பரற் பாலையுஞ் செந்தேன்

     பொழிதரு சோலைப் படப்பையுங் கடந்து

         போயினர் நிரைகண்முன் னேக.

11

      (இ-ள்) அன்றியும், மேகங்கள் நெருங்கி யிருட்சியுற்றுச் சூரியன் தோன்றாத வனங்களையும், கொல்லைகளையுந் தாண்டித் தழைகள் செறிந்து பிரகாசியா நிற்குங் குளங்களையும் ஓடைகளையுடைய தடங்களையும் ஆறுகளையும் நெருங்கி மான் கூட்டங்கள் ஓடி நீரில்லாமல் தவித்து வருந்தி அலைந்த ஒள்ளிய பரற்கற்களையுடைய பாலை நிலங்களையும், சிவந்த மதுவைச் சிந்துகின்ற சோலைகளையுடைய படப்புகளையுங் கடந்து பசுக் கூட்டங்கள் முன்னாற் செல்லும் வண்ணம் போனார்கள்.

 

4923. நீங்கருஞ் சேற்றி லீற்றுளைந் தலறி

         நிலாவெனச் சங்கமுத் துயிர்க்கப்

     பூங்கருங் குவளை யலர்ந்திடும் விரும்பிப்

         புள்ளறு கால்படத் தகர்ந்து

     தீங்கரும் பெருத்திற் றூங்குதே னுடைந்து

         சிதறிடும் பணைபுடை சூழுந்

     தாங்கல்சேர் வளமை செறிந்திடுங் காபா

         வென்னுமத் தலத்தினைச் சார்ந்தார்.

12

      (இ-ள்) அவ்வாறு போய்ச் சங்கங்கள் நீங்குதற் கருமையான சேற்றில் சூலினால் வருந்திச் சத்தித்து நிலாவைப் போலும் முத்தங்களை யீன, அதனால் அழகிய நீலோற்பல மலரானது மலர்ந்திடுமண் இச்சித்து வண்டுகளின் ஆறுபாதங்களும்பட, அதனால் உடைந்து இனிய கரும்பினது பிடரில் தொங்கா நிற்கும் தேன்கூடானது தகர்ந்திடும் வயல்களை பங்கங்களிற் சூழப் பெற்ற குளங்களைப் பொருந்திய செல்வமானது நெருங்கிய காபாவென்று சொல்லும் அந்தத் தானத்தைச் சேர்ந்தார்கள்.