பக்கம் எண் :

சீறாப்புராணம்

1790


இரண்டாம் பாகம்
 

4926. ஆண்டுறைந் திருந்த போதினில் கத்பான்

         கூட்டத்தி லமர்ந்தெழுங் கயவர்

     மாண்டயங் கியவே லுயையினா வும்போர்

         மல்கபு துற்றகு மானுந்

     தாண்டுவாம் பரியின் விறலினர் வெற்றித்

         தலைவர்நாற் பதின்மரு மாகக்

     காண்டருங் குன்றுங் கடங்களுங் கடந்து

         வந்தனர் கடுஞ்சரங் கடுப்ப.

15

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு அங்கே தங்கியிருந்த காலத்திற் கத்துபான் கூட்டத்தில் தங்கி யெழும்பிய கீழ்மக்களான மாட்சிமையானது தயங்கப் பெற்ற வேலாயுதத்தையுடைய உயையினாவென்பவனும் யுத்தத்தினா லோங்கிய அப்துர் றஹ்மாவென்பவனும் மிகவுந் தாவிப் பாய்கின்ற குதிரை வீரர்கள், விஜயத்தைக் கொண்ட தலைவர்களான நாற்பது பெயர்களுமாகப் பார்த்தற் கருமையான மலைகளையும் வனங்களையுந் தாண்டிக் கொடிய அம்பினது வேகத்தைப் போலும் வேகமாய் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

 

4927. வந்துகா பாவிற் செறிந்திடு நிரையைச்

         சுற்றினர் வளைந்தனர் சோரி

     சிந்திடப் பொதுவன் றலைதகர்ந் தோட

         வெட்டினர் செழுந்திறல் வீரர்

     கந்துக நடத்திக் காலிக ளனைத்தும்

          வவ்வினர் கலைந்தலை யாமற்

     பந்திபந் தியதா நடத்தினர் கிடந்த

          பணித்தலை நடுங்கிட வன்றே.

16

      (இ-ள்) செழிய வலிமையையுடைய அந்த வீரர்கள் அவ்வாறு வந்து அக் காபாவென்ற தலத்திற் கூடிய பசுக்கூட்டங்களைச் சுற்றி வளைந்து இரத்தமானது சிந்தவும், அந்த இடையானது தலையானது உடைந்து ஓடவும் வெட்டித் தங்கள் குதிரைகளை நடத்தி அந்தப் பசுக்களெல்லாவற்றையும் வவ்வி ஆதிசேடனது தலையிற் கிடந்த இப்பூமியானது நடுக்கமுறும் வண்ணம் அப்பசுக்கள் கலைந்து அலையாதபடி வரிசைவரிசையாக நடத்தினார்கள்.

 

4928. விண்டுகள் பரப்ப நடத்திடும் போதில்

         விறல்சல்மா வென்னுமவ் வேந்தர்

     கண்டுளம் வெகுண்டு திறலிற பாகைக்

         கடிதினில் விளித்துத்தா னேறிக்