பக்கம் எண் :

சீறாப்புராணம்

1796


இரண்டாம் பாகம்
 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4939. புடைசெறி கிடுகி னாலும் பொருகணைத் தொழிலி னாலு

     மடல்செறி தண்டி னாலு மமைந்திடு சோட்டி னாலும்

     படருலப் புயத்தி னாலும் பருவரைத் தனுவி னாலுந்

     தொடைகழல் வீர ரொட்டித் தட்டினர் தூள தாக.

28

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு வீச, வெற்றி மாலையையும் வீரக் கழலையு மணிந்த வீரரான அந்தச் சல்மா றலியல்லாகு அன்கு அவர்கள் பக்கத்திற் செறிந்த கேடகத்தினாலும், பொருதுகின்ற அம்புகளினாலும் வலிமை மிகுந்த தண்டத்தினாலும், தங்களது சரீரத்தின் கண் பொருந்திய கவசத்தினாலும், பரவிய திரண்ட கல்லை நிகர்த்த தோள்களிலானும், பெரிய மூங்கிலினாற் செய்யப்பட்ட கோதண்டத்தினாலும், அவைகளெல்லாந் தூளாகும் வண்ணம் ஒட்டித் தட்டினார்கள்.

 

4940. சிவைக்கடை போலுஞ் செந்தீத் தழலெழ விழித்த டர்ந்து

     பவக்கடற் புகுது மள்ளர் பருவரைப் புயத்தின் மீது

     நவக்கடை வாயின் மீது நகைமுடிச் சென்னி மீதுங்

     கவைக்கடைக் கணைகள் பாய விட்டனர் குருதி கால.

29

      (இ-ள்) அவ்வாறு தட்டி உலைத்துருத்தியினது நுனியைப் போலுஞ் செந்நிறத்தைக் கொண்ட அக்கினியினது வெப்பமானது எழும்பும்படிக் கண்களை விழித்து நெருங்கிப் பாவமாகிய சமுத்திரத்தில் நுழையா நிற்கும் வீரர்களான அந்தக் காபிர்களது பெரிய மலையைப் போன்ற தோள்களின் மீதும், குற்றத்தைக் கொண்ட கடைவாயின் மீதும், பிரகாசிக்கின்ற கிரீடத்தைத் தரித்த தலையின் மீதும், கவரைப் பெற்ற கடையையுடைய அம்புகள் பாயவும் இரத்தமானது கொப்பளிக்கவும் விடுத்தார்கள்.

 

4941. ஆண்டுடைந் தூறு பட்ட பறந்தலை யதனின் வந்து

     பூண்டருங் கலன்கள் பற்றிப் புனைகலை யுடைகைக் கொண்டு

     சேண்டரு மிடங்க டோறுந் தெரிதரப் போட்டு விட்டுக்

     கூண்டரு நிரைபின் னேகிச் சென்றனர் கூற்று மஞ்ச.

30

      (இ-ள்) அவ்வாறு அங்கே யுடைந்து காயப்பட்ட பாடிவீட்டின் கண் வந்து அவர்களது பூண்களையுடைய ஆபரணங்களைப் பற்றி அணியும் வஸ்திரங்களாகிய உடைகளைக் கைக்கொண்டு விசாலமான விடங்க ளெல்லாவற்றிலுந் தெரியும்படி போட்டு விட்டு அரிய அந்தப் பசுக் கூட்டத்தின் பின் சேர்ந்நது எமனும் பயப்படும் வண்ணம் நடந்து சென்றார்கள்.