பக்கம் எண் :

சீறாப்புராணம்

191


முதற்பாகம்
 

என்னைவிட்டும் நீங்கவும் காண்கிலேன். ஒருகையே யல்லாமல் பின்பு வேறே அன்னியர்கள் இங்கு வந்து எடுத்துக்கொண்டு செல்லவும் கண்டிலேன். ஆனால் இனி முகம்மதைக் காணாது யான் பிழைக்கும் வழி யாதென்று சொல்லி மனங்கலங்கிச் சரீரமானது ஒடுக்கமுற்று ஐயோ வெனவும், கோவெனவும், மகனே வெனவும், விதியோ வெனவும், பலவாறாகச் சொல்லிச் சத்தமிட்டு அழுதார்கள்.

 

452. கவச வல்லுரங் கீண்டவர் வஞ்சனைக் கருத்தோ

    அபசி மாநசு றானிகண் மாயமோ வலது

    புவியிற் பூதங்க ளலகைகள் செய்தொழிற் பொருளோ

    வெவர்க ளிவ்விடர் செய்தவ ரெனமன மிடைந்தார்.

62

     (இ-ள்) அன்றியும் அங்கிகளை அணியாநிற்கும் வலிமை தங்கிய அந்நபிகணாயக மவர்களின் மார்பை முன்னர்க் காட்டில் வைத்து கீறியவர்களின் எண்ணத்தினாலாகிய வஞ்சனையோ? அல்லது ஹபஷிநகரத்திலிருந்து வந்திருந்த பெருமை தங்கிய நசுறானிகளின் மாயமோ? இந்தப் பூமியின் கண்ணுள்ள பூதங்கள் பிசாசுகளின் செய்தொழிற் குணமோ? எவர்கள் இத்தீங்கு செய்தார்கள். யாம் அறிந்தோ மில்லையே யென்று சொல்லி மனமானது வசக்கேடுற்றார்கள்.

 

453. வஞ்சி மெல்லிடை வாட்டமு நடுக்கமும் வாசக்

    கஞ்ச மென்முகக் கோட்டமுங் கண்ணினீர்க் கவிழ்ப்புங்

    கொஞ்சு மென்மொழி குழறிடப் புலம்பிய குறிப்பு

    மஞ்சி நின்றது பயந்தொடுங் கியவர லாறும்.

63

     (இ-ள்) அவ்விதம் வசக்கேடுற்ற வஞ்சிக்கொடி போன்ற மெல்லிய இடையினையுடையாளாகிய ஹலிமா அவர்களின் மெலிவையும் நடுக்கத்தையும், வாசனை பொருந்திய தாமரை மலர் போன்ற மென்மையான முகத்தினது வளைவையும், கண்களிலிருந்து ஒழுகும் நீரினது கவிழ்ப்பையும், கொஞ்சா நின்ற மிருதுவாகிய வார்த்தையானது குழறிடும்படி புலம்பிய குறிப்பையும், அச்சமுற்று நின்றதையும், பயந்து ஒடுக்கமடைந்த வரலாற்றையும் கண்டு.

 

454. கரிய பூங்குழல் சென்னிறப் பூழ்தியிற் சுரந்து

    விரித ரக்கிடந் தொளிருமெய் பதைத்துவாய் வெளிறி

    யெரியு நெய்யிடை யிட்டபைந் தளிரென விருந்த

    வரிவை தன்வயி னெறிசெலும் பேர்கள் கண் டடைந்தார்.

64

     (இ-ள்) கருமை பொருந்திய அழகிய கூந்தலானது சிவந்த நிறத்தையுடைய தூசியில் மறைந்து விரியும்படி கிடந்து