முதற்பாகம்
தெய்வமானது ஒன்றுளது.
அவ்விடத்தில் நாம் போயிருந்து முறையிட்டுக் கேட்போம் வாவென்று நல்ல வார்த்தைகளைச்
சொல்லினான்.
461.
விருத்த னம்மொழி
யியம்பிட விளங்கிழை யலிமா
கருத்தி லுற்றிவை
யறிகுவ மெனநடுக் கானிற்
குருத்த செங்கதி
ருதித்தெனக் கொடுமுடி யியற்றி
யிருத்து மாலயத்
தேகின ரவன்மொழிக் கிசைந்தே.
71
(இ-ள்)
அக்கிழவனானவன் அவ்வார்த்தைகளைச் சொல்லவே பிரகாசிக்கின்ற ஆபரணங்களையுடைய ஹலிமா
அவர்கள் அவற்றைச் சிந்தையின்கண் பொருந்தி யிச்செய்தியைக் கண்டறிவோமென்று அவன்
சொல்லுக்குச் சம்மதப்பட்டு உதயமாகா நிற்கும் சூரியனானவன் பிரசன்னமானாற் போலப்
பிரகாசிக்கும்படி கொடுமுடிசெய்து நடுக்காட்டில் இருத்திய அக்கோவிலின்கண் போய்ச்
சேர்ந்தார்கள்.
462.
முருகு லாங்குழன்
மடந்தையர்க் காய்நரை முதியோன்
செருகு பொன்மலர்க்
கோயிலிற் காவணத் தினினின்
றுருகு தன்மனப்
பயத்தொடும் வாய்புதைத் தொதுங்கிப்
பொருவி லாமணி
யேமுத லேயெனப் புகழ்ந்தான்.
72
(இ-ள்)
அவ்விதம் போய்ச் சேர்ந்து, வாசனையுலவா நின்ற கூந்தலையுடைய பெண்ணாகிய ஹலிமா அவர்களுக்காக
நரையையுடைய அந்தக் கிழவனானவன் அழகிய புஷ்பங்களைச் சொருகா நிற்கும் அக்கோயிலினது
முன்வசமிருக்கின்ற பந்தரில் நின்றுக்கொண்டு கரைகின்ற தனது மனப் பயங்கரத்தோடும் கைகளால்
வாயை மறைத்து ஒதுங்கி ஒப்பிலாத மணியே! ஆதியே! யென்று சொல்லித் துதித்தான்.
463.
போற்றித்
தெண்டனிட் டெழுந்தொரு வரமெனப் புகன்று
கூற்ற டர்ந்தவேல்
விழியெளி யவளிவள் குழந்தை
மாற்ற லர்க்கரி
வடிவுறும் பெயர்முகம் மதுவை
யாற்றி னிலிழந்
தாளருள் வாயென வறைந்தான்.
73
(இ-ள்)
அவ்வாறு துதித்துத் தெண்டனிட்டு எழும்பி ஒரு வரம் வேண்டுமென்றுகூறி எமனையும் தமக்கு இணையில்லை
யென்று சொல்லி அடர்ந்த வேல்போலுங் கண்களையுடைய எளியவளாகிய இவ்வலிமாவினது குழந்தையானது
சத்துராதிகளென்னும் யானைகட்குச் சிங்கமானது. அன்றியும், முஹம்மதென்னும் அழகு பொருந்திய
திருநாமத்தையுடையது. அப்பிள்ளையை அவள் வருகின்ற வழியின்கண் வைத்து இழந்து விட்டாள்.
ஆதலால் அதை எங்களுக்குத் திருப்பித் தருவாயாகவென்று சொன்னாள்.
|