பக்கம் எண் :

சீறாப்புராணம்

198


முதற்பாகம்
 

     473. பரற்செ றிந்தகர னிடத்தினும் பருப்பத நெறியும்

        விரற்பு குந்திடா வனத்தினும் வேறுசிற் றூரு

        மிரைத்த பீடிகை மாடமா நகரிக ளெவையு

        நிரைத்துத் தேடியுங் காண்கில மெனநிகழ்த் தினரே.

83

     (இ-ள்) அவ்வாறு நடந்து சென்ற அந்தப் பந்து ஜனங்களானவர்கள் பரற்கற்கள் நிறைந்த காடுகளிடத்திலும் மலைப்பாதைகளிலும் விரல்கள் நுழையாத வனங்களிலும் மற்றுமவ் விடத்திலுள்ள சிறிய நகரங்களிலும் சத்தித்த கடை வீதிகளையும் உப்பரிகைகளையுமுடைய பெருமை பொருந்திய பட்டணங்க ளெல்லாவற்றிலும் ஒழுங்காகத் தேடிப் பார்த்தும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைக் காண்கிலோமென்று திரும்பி வந்து அப்துல்முத்தலி பவர்களுக்குச் சொன்னார்கள்.

 

     474. அகந்த யங்கிமெய் மறந்தெழி லப்துல்முத் தலிபு

        வகிர்ந்து பேரொளி திருந்திட விரிந்தகஃ பாவிற்

        புகுந்து சுற்றிவந் தடிபணிந் திறைஞ்சிவாய் புதைத்து

        நெகிழ்ந்த நெஞ்சினோ டாகுலத் தயருமந் நேரம்.

84

     (இ-ள்) அச்சொற்களைக் காதுகளினாற் கேள்வியுற்ற அழகிய அப்துல் முத்தலிபவர்கள் மனமானது தயக்கமுற்று உடல் மறந்து பெரிய பிரகாசமானது போழ்ந்து செவ்வையாகும்படி எவ்விடமும் விரிவுற்ற கஃபத்துல்லாவில் நுழைந்து பிரதக்கணஞ்செய்து அங்கிருந்த சுவாமிகளின் முன்னர் வந்து பாதங்களிற் றாழ்ந்து வணங்கி வாயினைக் கைகளால் மறைத்துக் கொண்டு நெகிழ்வுற்ற மனத்துடன் வருத்தத்தினால் தளர்வுறு மந்தச்சமயத்தில்.

 

     475. தரையில் வானகத் திருந்திறங் கியதொரு சத்தம்

        விரைக மகிழ்ந்திடுங் கஃபத்துல் லாவிற்றென் மேல்பா

        னிரைம லர்த்தடத் தோடையின் வாழையி னிழற்கீ

        ழரிய மாமறை முகம்மதங் கிருப்பதென் றதிர்ந்தே.

85

     (இ-ள்) அரிதான பெருமை தங்கிய தவத்தினையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் வாசனையானது பரிமளியா நிற்கும் கஃபத்துல்லாவின் தென்மேற்கு பக்கத்தில் வரிசையாகிய புஷ்பங்கள் நிறைந்த ஒரு தடாகத்தின் ஓடைக்கரையில் நிற்கும் வாழை மரத்தினது நிழலின்தாே்ழ தங்கியிருக்கின்றாரென்று அதிர்ச்சியோடும் ஒரு சத்தமானது வானலோகத்திலிருந்து பூமியின் கண்ணிறங்கினது.