பக்கம் எண் :

சீறாப்புராணம்

207


முதற்பாகம்
 

அலைகிவசல்ல மவர்கள் தழைப்புற்று வாழ்கவென்று பற்பல விதமான கீர்த்திகளை யெடுத்துப் பாடுவதை யொத்திருந்தது.

 

501. பின்னிய தடத்தரு சினையிற் பேட்டொடு

    மன்னிய குயிலினம் வாய்விட் டார்ப்பது

    கன்னலஞ் சுவைக்கலி மாவை நந்நபிக்

    கின்னண மியம்புமென் றிசைத்தல் போலுமே

20

     (இ-ள்) அன்றியும், விசாலமான அங்குள்ள சோலையின்கண் ஒன்றோடொன்று பின்னப்பட்ட கிளைகளிலிருந்து பெட்டைக் குயில்களுடன் பொருந்திய ஆண் குயிலினது கூட்டங்கள் தங்களது வாயைத் திறந்து ஒலிப்பது நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அழகிய கரும்பினது இனிமையை யொத்த கலிமாவை உங்களது இனிய வாயினால் ஓதுங்களென்று சொல்வதை யொத்திருந்தது.

 

502. பொன்முடி வேந்தர்கள் புதல்வர் தம்மொடு

    மன்னவர் முகம்மதும் வாவி நீர்குளித்

    தன்னமென் றூவியி னரிய வெண்டுகின்

    மின்னினைப் பொதிந்தென வரையில் வீக்கினார்

21

     (இ-ள்) அப்பொழுது சொர்ணத்தாலான கீரிடங்களைத் தரித்த அம்மதீனமா நகரத்தின் கண்ணுள்ள அரசர்களது குமாரர்களோடு வேந்தராகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் அத்தடாகத்தினது ஜலத்தில் ஸ்நானஞ் செய்து அன்னப் பட்சியின் மென்மை பொருந்திய சிறகைப் பார்க்கிலும் அரிதான வெள்ளிய வஸ்திரத்தை யெடுத்து வானலோகத்தின்கண் விளங்கா நிற்கும் மின்னை மறைத்தாற்போல அரையின்கண் மறைத்துக் கட்டினார்கள்.

 

503. கணமணிக் கலன்பல வணிந்து கள்ளறா

    மணமலர் மாலிகை சூடி வான்றொடு

    பணர்தரு பாசடைத் தருவின் பாலுயிர்த்

    துணைவரோ டரியெனத் தோன்றல் வைகினார்.

22

     (இ-ள்) அவ்விதம் கட்டிய பெருமையிற் சிறந்தோரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கூட்டமான இரத்தினவருக்கங்களழுத்தப்பட்ட பலவித ஆபரணங்களைத் தரித்து தேனானது நீங்காத வாசனை பொருந்திய புஷ்பங்களையுடைய மாலைகளைச் சூடி ஆகாயத்தைத் தீண்டா நிற்கும் கிளைகளைத் தரா நின்ற பசிய இலைகளையுடைய ஒரு விருக்கத்தினது நிழலின்கண் தங்களது ஜீவனைப் போன்ற தோழர்களோடும் ஆண் சிங்கத்தைப் போலத் தங்கியிருந்தார்கள்.