பக்கம் எண் :

சீறாப்புராணம்

276


முதற்பாகம்
 

     692. பாலையி லடைந்து பசியினா லிடைந்து

              பலபல வருத்தமுற் றதுவும்

         வேலைவா ருதிபோல் வழிபிழைத் ததுவுங்

              விழுந்தியான் முகமுடைந் ததுவுங்

         கோலமார் புலிவந் ததுமுகம் மதையாங்

              கூட்டிவந் துறுபவ மென்னச்

         சாலவு முரைத்தா னீதியை வெறுத்த

              தறுகணா னெனுமபூ சகுலே.

13

     (இ-ள்) அப்பொழுது நியாயத்தை வெறுத்த தறுகண்ணனென்னும் அபூஜகிலானவன் நாமனைவோர்களும் இந்தப் பாலை நிலத்தின்கண் வந்து சேர்ந்துப் பசியினால் வசக்கேடுற்றுப் பற்பல துன்பங்களடைந்தும், நீர்த்திரைகளையுடைய சமுத்திரத்தைப் போன்ற பாதையானது தவறினதும், யான்பூமியின் கண் விழுந்து முகந்தகர்ந்ததும், அலங்காரமாகிய வேங்கையானது வந்து சேர்ந்ததும், இந்த முகம்மதென்பவனை நம்மோடு கூட்டிக் கொண்டு வந்ததினால் பொருந்திய பாவமென்று மிகவாக எடுத்துச் சொன்னான்.

 

     693. மூரிவெற் பனைய புயமுகம் மதுவை

              முன்னிலைத் தலைவரா நிறுத்தித்

         தாரையிற் செலுநும் மிடர்களுந் தவிருந்

              தழலெழும் பாலையுங் குளிர்ந்து

         வேரியங் கமல வாவியங் கரையாம்

              விரைவினிற் சாமடை குவமென்

         றாரிதுக் குரைத்தார் தாதவிழ் மலர்த்தா

              ரணிதிகழ் புயத்தபூ பக்கர்.

14

     (இ-ள்) பின்னர் இதழ்கள் விரிந்த புஷ்பமாலையினது அழகு பிரகாசியாநின்ற தோள்களையுடைய அபூபக்கரவர்கள் பெருமைதங்கிய மலைபோலும் புஜங்களையுடைய நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை முன்னிலையின் நாயகராக நிற்கச் செய்து நீங்கள் பாதையின்கண் செல்லுங்கள். உங்களுடைய துன்பங்களும் நீங்கும். அக்கினியானது எழும்பாநின்ற இந்தப் பாலை நிலமுங் குளிர்ச்சியடைந்து வாசனை பொருந்திய அழகிய தாமரைத் தடாகங்களின் கரைகளைப் போலாகும். நாமும் சீக்கிரத்தில் சாம்நகரத்தைப் போய்ச் சேருவோமென்று ஆரிதென்பவருக்குச் சொன்னார்கள்.