பக்கம் எண் :

சீறாப்புராணம்

292


முதற்பாகம்
 

      (இ-ள்) அப்போது பாரமான மேக்குடையினது நிழலின்கண் அழகு பெற்றோங்கா நிற்கும் தேனைப் பொருந்திய புஷ்பமாலையணிந்த புயங்களை யுடையோரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அவ்வாறு மனசின்கண் துன்பமானது பொருந்தும்படி வருத்தமுற்று மயங்கிய தங்களது கூட்டக்காரர்களான அனைவர்களையும் இனிமையுடன் பார்த்துச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

     740. இற்றைநா ளிரவிவ ணிருந்து கண்டுநா

        மற்றைநாட் போகுவம் வருந்த லென்றனர்

        வெற்றியும் வீரமுந் தவத்தின் மேன்மையு

        முற்றிய மாட்சியா ரலங்கன் மொய்ம்பினார்.

18

     (இ-ள்) அப்பொழுது விஜயமும் வலிமையும் தவத்தினது மேன்மையும் முதிர்ந்த மாட்சிமையு முடையவர்களான புஷ்பமாலையணிந்த புயங்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாலகு அலைகிவசல்லமவர்கள் நாம் அனைவர்களும் இன்றையத்தினம் இராமுழுவதும் இம்மலையின் மீது தங்கியிருந்து பார்த்துக் கொண்டு நாளையத்தினம் இங்கிருந்தும் எழும்பிப் பிரயாணமாகி நாம் குறித்துவந்த இடத்திற்கு போகுவோம். ஆனதினால் நீங்களொருவரும் மனசின்கண் வருத்தப்பட வேண்டாமென்று சொன்னார்கள்.

 

     741. இருகரை களுந்தெரிந் திலவிம் மானதி

        பெருகவ தடிக்கடி பேது றாதுபி

        னொருமொழி யுரைத்தவ ருளத்தின் பெற்றியைத்

        தெரிகிலோ மெனமனந் தேம்பி னாரரோ.

19

     (இ-ள்) அவர்கள் அவ்விதம் சொல்ல இப்பெரிய ஆறானது அடிக்கடிப் பெருகுகின்றது. பார்ப்பவர்களின் கண்களுக்கு இரு கரைகளும் தோற்றவில்லை. பின்னர் மயக்கமடையாது நாளையத்தினம் சொல்லுவோமென்று ஒப்பற்ற வார்த்தை சொன்னவர்களான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் மனசின்கண்ணுள்ள தன்மையை இன்னதென்றும் யாமறிந்திலோ மென்று கூறி அனைவர்களும் மனவாட்டமுற்றார்கள்.

 

     742. அவ்வுழிச் சபறயீ லடைந்து கண்டுயில்

        செவ்விநேர் முகம்மது கனவிற் செப்பினா

        ரிவ்விருள் விடிந்தபி னெழுந்து முன்னரோர்

        நவ்விதோன் றிடும்வழி நடத்தி ரென்னவே.

20