பக்கம் எண் :

சீறாப்புராணம்

313


முதற்பாகம்
 

பூரிக்கப் பெற்று விசாலமாகிய அச்சோலையின்கண் இறங்கியிருந்தார்கள். எருதுகள் ஒட்டகங்கள் குதிரைகளியாவும் ஜலமருந்தி இலை முதலிய உணவுகளை யுண்டு அவ்விடத்திற்றானே தங்கிய பின்னர் அவர்கள் செவ்வையான பொருள்க ளெல்லாவற்றையும் நெருக்கமாக ஓரிடத்திற்கூட்டி வைத்தார்கள்.

 

800. மறந்தலை மயங்குஞ் செவ்வேற் கரமுகம் மதுதாம் வந்தங்

    குறைந்திடத் தருக்க ளியாவுந் தளிர்த்தன வொண்பூக் கோட்டி

    னிறைந்தன வீன்ற பைங்காய் நெருங்கின கனிக ளெங்குஞ்

    சிறந்தன தேம்பெய் மாரி சிந்தின திசைக ளெல்லாம்.

15

     (இ-ள்) அப்போது கொலையானது பெருகிய சிவந்த வேற்படைதாங்கிய கையினையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் வந்து அந்தச் சோலையின்கண் தங்கிடவே; அங்குள்ள மரங்கள் முழுவதுந் துளிர்த்தன. அவற்றின் கொம்புகளில் தெள்ளிய புஷ்பங்கள் பெருகின. காய்க்கப் பெற்ற பசியகாய்கள் செறிந்தன. எவ்விடத்தும் பழங்கள் மிகுத்தன. எண்டிசைகளிலும் சொரியாநின்ற தேன்மழை பொழிந்தன.

 

801. மறைதெரி இசுறா வென்போன் முகம்மது தமக்கன் பாக

    முறைவிருந் தளிக்கு முன்ன முகிழ்நனி தருக்க ளெல்லா

    நிறைமலர்த் தலைகள் சாய்த்து நீண்டமென் றளிர்க்கை தன்னால்

    வெறிநறாக் கனிகள் சிந்தி விருந்தளித் திட்ட வன்றே.

16

     (இ-ள்) அன்றியும், வேதங்களைக் கற்றுணர்ந்த இசுறா வென்னும் பண்டிதனானவன் நேசத்தோடும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுக்கு வரிசையான விருந்து கொடுப்பதற்கு முன்னர் மிகுந்த மலரரும்புகளையுடைய அச்சோலையின் கண்ணுள்ள விருட்சங்களனைத்தும் பெருகிய புஷ்பங்களாகிய சிரங்களைச் சரித்து நீட்சியுற்ற மெல்லிய துளிர்களாகிய கைகளால் வாசனை பொருந்திய தேனையுடைய பழங்களைச் சிதறி விருந்து கொடுத்தன.

 

802. விரிபசுந் தோடு விண்டு மென்முகை யவிழ்க்கும் பூவி

    னரியளி குடைந்து தேனுண் டகுமதின் புகழைப் பாட

    மரகதக் கதிர்விட் டோங்கு மணிச்சிறை விரித்து நீண்ட

    கரைகளிற் றருவி னீழற் களிமயி லாடு மன்றே.

17

     (இ-ள்) அன்றியும், விரிந்த பசிய இதழ்களைத் துறந்து மிருதுவான மொட்டுகளை மலரும்படி செய்யும் தேனீக்கள் புஷ்பங்களைத் துளைத்து மதுவை யருந்தி அஹ்மதென்னுந் திருநாமத்தை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல