பக்கம் எண் :

சீறாப்புராணம்

316


முதற்பாகம்
 

808. மடிவுறு மனத்த னாகி வருமபூ சகுலென் றோதுங்

    கொடியவன் கவட மாயோர் சூழ்ச்சியைக் குறித்து நீண்ட

    கடிகமழ் சோலை வாயின் முகம்மதைச் சரக்குக் காக்கும்

    படியிருத் திடுக யாரும் பரிவுட னெழுக வென்றான்.

23

     (இ-ள்) அப்போது கேடுதங்கிய இருதயத்தையுடை யோனாகி வராநிற்கும் அபூஜகிலென்று சொல்லும் கொடுமை தங்கிய பாதகன் தனது மனசின்கண் வஞ்சகமான (ஓர் உபாயத்தை) ஆலோசித்து ஆங்குற்றவர்களை நோக்கி நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களை நீட்சியுற்ற வாசனையானது பரிமளியா நிற்கும் இந்தச் சோலையினிடத்தில் சரக்குகளைக் காத்துக் கொள்ளும்படியாக இருத்தி வையுங்கள். மற்றரியாவர்களும் விருந்துண்ணும்படி ஆசையோடும் எழும்புங்களென்று சொன்னான்.

 

809. வஞ்சக னுரைத்த மாற்றங் கேட்டபூ பக்கர் மாழ்கி

    நெஞ்சகம் புழுங்கிச் சென்றார் நிறைமலர்த் தேனை மாந்திச்

    சஞ்சரி கங்கள் பாடுந் தண்டலை நீங்கி யாரும்

    விஞ்சையு மறையுந் தேர்ந்த வேதியன் மனையிற் புக்கார்.

24

     (இ-ள்) வஞ்சகனாகிய அவ்வபூஜகி லென்பவன் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளை அபூபக்கரவர்கள் தங்களது காதுகளினாற் கேள்வியுற்று மயங்கி மனசினுள் புழுக்கமடைந்து பெருகிய புஷ்பங்களினது மதுவைக் குடித்துத் தேனீக்கள் பாடாநிற்கும் அந்தச் சோலையை விட்டும் மாறி முன்னரெழுந்து பலவிதக் கல்விகளையும் வேதங்களையும் நன்றாகக் கற்றுத் தேர்ந்த வேதியனான இசுறாவென்னும் பண்டிதனது வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள். பின்னர் நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நீங்கலாக மற்றும் வியாபாரிகளான அனைவர்களும் போய்ச் சேர்ந்தார்கள்.

 

810. மூதுரை வழிவ ழாதோன் முன்றில்வந் தவர்க ளோடுஞ்

    சீதவொண் கவிகை நீழற் காண்கிலன் றெருமந் தேங்கிப்

    பாதக ரிவரியா ரென்றன் பவக்கட றொலைய வந்த

    மாதவ ரிலையென் றெண்ணி வாடிய மனத்த னானான்.

25

     (இ-ள்) அப்போது நபிமார்கள் முதலிய முன்னோர்களின் பழமொழிகளினது ஒழுங்குகளைத் தவறாதவனான இசுறாவென்னும் அப்பண்டிதன் தனது வீட்டின் முற்றத்தில் வந்தவர்களோடும் ஒள்ளிய மேகக் குடையினது நிழலைக் காணாதவனாகிச் சுழன்று ஏக்கமுற்றுப் பாதகர்களாகிய இவர்கள் யாவர்கள்? எனது பாவச் சமுத்திரந் தொலையும்படி வந்த மகாதவத்தை யுடையவர்களான நபிமுகம்மது சல்லல்லாகு