பக்கம் எண் :

சீறாப்புராணம்

32


முதற்பாகம்
 

     50. கையினிற் செறிந்த முடியினைச் சிதறிக்

             கடைசியர் கரங்கடொட் டொழுங்காய்ச்

        செய்யினிற் பதிப்பத் துளிகருஞ் சேறு

             தெறித்திடுஞ் செழுமுகச் செவ்வி

        துய்யவெண் டிரைப்பாய் சுருட்டிமே லெறியுந்

             தொடுகடன் முகட்டிடை யெழுந்து

        வையகஞ் சிறப்ப வருமுழு மதியு

             மறுவுமொத் திருந்தன மாதோ.

30

     (இ-ள்) அன்றியும், கையிற் பொருந்திய அந்நாற்றினது முடியைச் சிதறச் செய்து அவ்வுழத்தியர்கள் தங்களின் கால்களினால் தொட்டு வரிசையாய் வயல்களில் பதிக்கக் கரிய சேற்றினது துளியானது தெறிக்கும் அவர்களின் செழிய முகத்தினது அழகானது, பரிசுத்தத்தைக் கொண்ட வெள்ளிய அலைகளான பாயைச் சுருட்டி மேலே வீசா நிற்கும் சகரர்களால் தோண்டப் பெற்ற சமுத்திரத்தினது உச்சியின்கண் எழும்பி இந்தப் பூலோகமானது சிறக்கும் வண்ணம் வருகின்ற பூரணச் சந்திரனையும் அச்சந்திரனின் களங்கத்தையும் நிகர்த்திருந்தன.

 

     51. பனைமதுத் தேக்கி யிருவிழி சேப்பப்

             பைங்கழை நிகர்த்ததோ ளசைய

        வனநடை சிதையச் சேவடி பெயர்த்திட்

             டள்ளலஞ் சேற்றிடை நடுவோர்

        சினமத கரிக்கோ டெனுமுலைத் தடத்திற்

             சேதகந் தெறிப்பது திரண்ட

        வனசமென் முகையிற் பொறிவரி யறுகால்

             வண்டுமொய்த் திருப்பது போலும்.

31

     (இ-ள்) அன்றியும், பனங்கள்ளை வயிறு நிறையும்படி தேக்கி இரண்டு கண்களும் சிவக்கவும், பசிய மூங்கிலை யொத்த தோள்கள் அசையவும், அன்னப்பட்சியினது நடையானது சிதையும் வண்ணம் சிவந்த பாதங்களைப் பெயர்த்து அள்ளுதற்குரிய அழகிய சேற்றின் கண் நாற்றை நடுவோர்களாகிய அவ்வுழத்தியர்களின் கோபத்தையும் மதங்களையுங் கொண்ட யானையினது கொம்பென்று சொல்லா நிற்கும் பெருமை பொருந்திய முலைகளில் சேறானது தெறிப்பது, திரட்சியுற்ற தாமரையினது மெல்லிய முகையின்கண் புள்ளிகளையும் இரேகைகளையும் ஆறு காற்களையுமுடைய வண்டுகளானவை மொய்த்து இருப்பதை நிகரா நிற்கும்.

 

      52. முற்றிழை கிடந்த முலைக்குவ டசைய

             முகிறவழ் கருங்குழ னெகிழச்