பக்கம் எண் :

சீறாப்புராணம்

335


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் போகவே அங்குற்ற வாழைமரங்களானவை வண்டுக் கூட்டங்கள் ஒன்றுகூடிக் கூவிப் புஷ்பங்களைத் துளைத்து அதன் கண்ணுள்ள மதுவில் மூழ்கித் தோயப்பெற்ற மகாமேருவைப் போன்ற இருவரைப் புயங்களும் பிரகாசிக்கும்படி பொருந்திய பெரிய பிரபையையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அங்கு வருவதைப் பார்த்துக் காய்களையுடைய திரண்ட குலைகளைச் சரித்து நின்று வணங்கின.

 

860. வேந்தர் வேந்தவ ணருகுற வடைதலும் விரிந்த

    மாந்த ருச்சினை யிடைபழத் தொடுந்துயல் வருதற்

    றேந்த ருங்கனி யுண்டெழுந் தருளெனச் செறிந்து

    சாய்ந்த மென்றளிர்க் கரத்தினா லழைப்பதொத் தனவால்.

4

     (இ-ள்) அன்றியும், அரசர்கட்கெல்லா மரசராகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்விடத்தில் தங்களது பக்கத்திலே பொருந்தும்படி அடைந்த மாத்திரத்தில், மாமரங்களினது விசாலித்த கிளைகளானவை தமதிடையின் கண்ணுள்ள பழங்களோடு மசையுதல், இவ்விடத்தில் தங்கித் தேனைத் தரா நிற்கும் எங்களது பழங்களை யருந்திப் பின்னரெழுந்து செல்லுங்களென்று நெருங்கிச் சரிந்த மெல்லிய தழைகளென்னுங் கைகளினால் அந்நபிகணாயக மவர்கள் கூப்பிடுவதை நிகர்த்திருந்தன.

 

861. தேக்கும் வெண்டிரைப் புவிக்கொரு தனிச்செங்கோல் செலுத்திக்

    காக்கு நாயக முஹம்மது வரும்வழி கவின

    வாக்கும் பொற்குட நனிநிரை நிரையணி யணியாய்த்

    தூக்கி வைத்தபோன் முட்புற நறைக்கனி தூங்கும்.

5

     (இ-ள்) அன்றியும், பெருகிய வெள்ளிய அலைகளைக் கொண்ட சமுத்திரத்தையுடைய இப்பூலோக முழுவதையும் ஏகமாய் ஒப்பற்ற செங்கோல் செலுத்திக் காக்குகின்ற நாயகமான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வருகின்ற பாதையானது அழகாயிருக்கும்படி சொர்ணத்தினாற் செய்யுங் குடங்களை வரிசைவரிசையாக அடுக்கடுக்காய்த் தூக்கி வைத்ததைப் போலப் பலாமரங்களினது வாசனை பொருந்திய பழங்கள் எவ்விடங்களிலும் தூங்கா நிற்கும்.

 

862. வெள்ளி வெண்மலர் சொரிந்தன பாளைவாய் விரித்துத்

    தெள்ளு செம்பொனாற் சமைத்தபோற் செழுங்குலை தாங்கி

    வள்ள லார்வரு நெறியலங் கரிப்பென வயங்கும்

    புள்ளி வண்டொடு பசுமடல் விரிதலைப் பூசும்.

6