முதற்பாகம்
869.
துய்ய சைவலச்
சுரிகுழ றுயல்வரச் சுனைமென்
றைய லுள்ளகங் குளித்துடற்
களிப்பொடுந் தனது
கையின் வென்மலர்ப்
பந்தெடுத் தெறிவது கடுப்பச்
செய்ய தாமரை
மீதனஞ் சிறந்தெழுந் ததுவே.
13
(இ-ள்)
அன்றியும், அங்குற்ற தடாகமான மெல்லிய பெண்ணானவள் பரிசுத்தமுற்ற பாசியாகிய முறுக்கையுடைய கூந்தலானது
அசையும்படி அகத்தின்கண் குளித்துச் சரீரச் சந்தோஷத்துடன் தனது கையினால் வெண்ணிறத்தையுடைய
புஷ்பத்தினாலியன்ற பந்தை எடுத்து வீசுவதைப் போலச் சிவந்த கமல மலரின் மேல் அன்னப்பட்சியான
திருந்து சிறப்புட னெழும்பினது.
870.
பண்ணை வாய்ச்செழுங்
கமலங்கள் செவ்விதழ் பரப்பி
யுண்ணி றைந்தமா மணியொடு
மொளிர்வன வவைகள்
வண்ண வார்கழன் முகம்மது
வருநெறிக் கெதிரா
யெண்ணி றந்தகை
விளக்கெடுத் தேந்தின ரியையும்.
14
(இ-ள்)
அன்றியும், வயல்களி னிடத்துள்ள செழிய தாமரை மலர்கள் தங்களது சிவந்த விதழ்களை விரித்து உள்ளே
நிறையைப் பெற்ற பெருமை பொருந்திய பதுமராகத்துடன் பிரகாசிக்கப்பட்ட அவைகள் அழகிய நேர்மையான
பாதங்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வருகின்ற பாதையின் முன்பாய்க்
கணக்கற்ற கைவிளக்குகளை எடுத்துத் தாங்கி நின்றவர்களைப் பொருந்தா நிற்கும்.
871.
வண்டி னத்தொனி
மறுத்தில மலர்சொரி வனங்கண்
முண்ட கத்திட மமர்ந்தில
புள்ளொலி முழக்கந்
தொண்டை வாய்ச்சியர்
குரவையே கழனிக டோறும்
பண்டி யின்றொகைக்
கம்பலை மறுத்தில பாதை.
15
(இ-ள்)
அன்றியும், புஷ்பங்களைச் சொரியா நிற்கும் அங்குற்ற சோலைகள் வண்டுக் கூட்டங்களினது ஓசைகளை
மறுத்திலன. தாமரைமலர்களையுற்ற தடாகங்கள் பட்சி சாலங்களின் தொனியையுடைய முழக்கத்தை விரிந்திருப்பதே
யல்லாமல் மறுத்திலன. வயல்கள் தோறும் அழகிய கொவ்வைக்கனி போலும் வாயினையுடைய கடைசியர்களின்
குரவையினது ஓசைகளே யல்லாமல் மறுத்திலன. பாதைகள் கூட்டமாகிய பண்டிகளின் ஓசைகளை மறுத்திலன.
872.
வடந்த யங்கிவிம்
மிதத்தெழுங் குவிமுலை மடவார்
குடைந்து நீர்விளை
யாடிய வாவியுங் குறுகிப்
படர்ந்த மல்லிகை
மாதுளைப் பந்தரு நோக்கிக்
கடந்தி லங்கிய
சாமெனுந் திருநகர் கண்டார்
16
|