பக்கம் எண் :

சீறாப்புராணம்

339


முதற்பாகம்
 

      (இ-ள்) அப்போது, நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல முதலிய வியாபாரிக ளனைவர்களும் ஆபரணங்க ளானவை கிடந்து பிரகாசிக்கப் பெற்றுப் பூரிப்போடு மெழா நிற்கும் குவிந்த முலைகளையுடைய மாதர்கள் குடைந்து நீரின்கண் விளையாடாநிற்கும் தடாகங்களையும் நெருங்கிய மல்லிகையும் மாதுகளையுமுடைய பந்தர்களையும் தங்களது கண்களினாற் பார்த்துக் கொண்டுத் தாண்டிச் சென்று விளங்கிய ஷாமென்று சொல்லும் அழகிய பட்டணத்தைக் கண்டார்கள்.

 

873. முதிர்ந்த பேரொளி முகம்மது வருநெறி முன்னி

    யெதிர்ந்தி றைஞ்சுதற் கிந்நக ருறைந்திடு மரசீர்

    பொதிந்த பூணொடு மேகுமி னெனக்களி பொங்கி

    யதிர்ந்தி டக்கர மசைத்தல்போ லசைந்தன கொடிகள்.

17

     (இ-ள்) அந்நேரத்தில் அந்த ஷாம்நகரத்தின் கோட்டை கொத்தளம் வீடு முதலியவைகளில் கட்டியிருக்கும் கொடிகளானவை இந்தப் பட்டணத்தின்கண் தங்கா நிற்கம் அரசரானவர்களே! முற்றிய பெரிய பிரகாசத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வருகின்ற பாதையை முன்னி அவர்களைச் சாதித்து வணங்குவதற்கு நீங்கள் உங்களது தேகத்தின்கண் பொதியப் பெற்ற ஆபரணங்களோடும் சொல்லுங்களென்று சொல்லிச் சந்தோஷமானது அதிகரித்து ஒலித்திடும்படித் தங்களது கைகளை அசைப்பதைப் போல அசைந்தன.

 

874. மதுக்கொண் மாலிகை நாற்றிநன் மணிபல குயிற்றிச்

    செதுக்கி மின்னுமிழ் தமனியத் தசும்புகள் செறித்து 

    விதுக்கொண் மேனிலை மென்றுகண் மாசறத் துடைத்துப்

    புதுக்கு வான்றொழில் புரிந்தபோ லசைந்தபொற் கொடிகள்.

18

     (இ-ள்) அன்றியும், அழகிய அக்கொடிகள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வருகைக்காகத் தேனைக் கொண்ட புஷ்பமாலைகளை நானாபக்கங்களிலும் தூக்கிப் பலவிதமான நல்ல இரத்தினவர்க்கங்களைச் சொரியா நிற்கும் பொற்குடங்களைச் சேர்த்துச் சந்திரனும் பற்றா நின்ற மேன்மாடங்களிலுள்ள மெல்லிய தூசிகளைக் குற்றமான தொழியும்படி வீழ்த்தித்திருத்தும் பொருட்டு வேலை செய்வதைப் போல அசைந்தன.

 

875. சிவந்த பாதபங் கயநபி திருநகர்ப் புறத்துக்

    கவிந்த கார்க்குடை நிழலிட வருவது கண்டு

    நிவந்த வெண்சுதைப் பளிக்குமே னிலைவயி னின்று

    குவிந்த கைவிரித் தழைத்தபோ லசைந்தன கொடிகள்.

19