பக்கம் எண் :

சீறாப்புராணம்

342


முதற்பாகம்
 

882. கந்துகமொ டுந்துமிர தங்களு மிடைந்து

    தந்தியின மும்பிடிக ளுந்தலை மயங்கிச்  

    சுந்தரம டந்தையரு மைந்தரொடு துன்றி

    வந்தவ ரெதிர்ந்தவர் நெருங்குமணி வாயில்.

26 

     (இ-ள்) அன்றியும், அம்மதிலின் புறத்துள்ள வாயில்கள் குதிரைகளுடன் செலுத்துகின்ற தேர்களும் ஆண்யானைக் கூட்டங்களும் பெண்யானைக் கூட்டங்களும் அடர்ந்து தலைமயக்குற்று அழகிய மாதர்களும் மாக்களுடன் நெருங்கி வருகிறவர்களும் அவர்களை யெதிர்த்து செல்லுகிறவர்களும் ஒருவரோடொருவர் செறிகின்ற அழகிய வாயில்கள்.

 

883. ஈறுதெரி யாதென வுயர்ந்தெழி றவழ்ந்து

    மாறுபகர் கின்றரிய மாமதிண் மதிக்கோர்

    வீறுபெற நின்றபரி வேடமென லாகி

    யூறுபுனல் கொண்டுகட லொத்தவக ழம்மா.

27

     (இ-ள்) அன்றியும், அம்மதிள்களைச் சூழ்ந்த அகழியானது முடிவென்பது கட்புலனுக்குத் தோற்றாதென்று சொல்லும் வண்ணம் ஆகாயத்தின்கண் ணோங்கி அழகானது தவழப் பெற்றுத் தனக் கெவ்விடங்களிலும் நிகரில்லையென்று மாறுகூறாநின்ற அரிய மகிமை தங்கிய மதிளாகிய சந்திரனுக்கு ஒப்பற்ற பெருமை பெற நிற்கப்பெற்ற சந்திரவட்டமென்று சொல்லும்படியாய் மாறாது சுரக்கா ஜலத்தினைக் கொண்டு சமுத்திரத்தை நிகர்த்தது.

 

884. தும்பிகள் குடைந்துபுன றுய்ப்பமக ரங்க

    ளும்பரி னெழுந்துமுத லைக்குல மொதுங்க

    வெம்பியு களுந்தொறு மிடைக்கயல் வெருண்ட

    கம்பலை யறாதலை கலிக்குமக ழன்றே.

28

     (இ-ள்) அன்றியும், அவ்வகழியானது யானைகள் வந்து தங்களது தும்பிக்கைகளினால் நீரைக் குடைந்து அருந்த, அதனால் சுறாமீன்கள் ஆகாயத்தின்கண் ணெழும்பி முதலைக் கூட்டங்கள் பதுங்கும்படி பாயுந்தோறும் இடையின் கண்ணுள்ள கெண்டை மீன்கள் வாட்டமுற்று மருட்சியடைந்த ஓசையானது நீங்காது அலைகள் பெருகா நிற்கும்.

 

885. இந்துதவழ் கின்றமதி ளும்மக ழிருந்த

    கொந்தல ருறைந்துவரி வண்டுகள் குடைந்து

    சிந்தமு தருந்துகய லங்கரை தியங்க

    வந்துநனி கண்டக மகிழ்ந்தனர்க ளன்றே.

29