பக்கம் எண் :

சீறாப்புராணம்

343


முதற்பாகம்
 

     (இ-ள்) அவ்வாறு சந்திரனானது தவழ்ந்து திரிகின்ற கோட்டை மதிலையும், அக் கோட்டை மதிலைச் சூழ்ந்த அகழியின்கண் தங்கிய புஷ்பித்த பூங்கொத்துகளில் இரேகைகள் படர்ந்த தேனீக்களமர்ந்து அவைகளைத் தங்களது காலுகளால் குடைந்து அவற்றிலிருந்து சொரிகின்ற அமுதத்தை அருந்தா நிற்கும் கெண்டைமீன்களையுடைய அழகிய கரைகளையும் பிரகாசிக்கும்படி நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் முதலிய வியாபாரிகளனைவர்களும் வந்து தங்களது கண்களினாற் பார்த்து மிகுந்த மனக்களிப்படைந்தார்கள்.

 

886. கண்டுநக ரந்தனை மனத்திடை களித்து

    வண்டுதுதை கின்றபுய மைந்தர்களி யாருங்

    கொண்டல்கவி யுந்திற லுடைக்குரிசி றானு

    மெண்டல மதிக்குமதி ளின்புற மிறுத்தார்.

30

     (இ-ள்) அன்றியும், அந்த ஷாம்நகரத்தை மேகமானது குடையாகக் கவியப்பெற்ற வலிமையையுடைய குரிசிலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் தேனீக்கள் நெருங்குகின்ற மலர்மாலையணிந்த தோள்களையுடைய வியாபாரிகளான அவ்வாடவர்களனைவர்களும் தங்களது கண்களினாற் பார்த்து மனசின்கண் மகிழ்ச்சியுற்று எட்டுத் திக்குகளிலும் மதிக்காநிற்கும் அந்நகரத்தினது கோட்டை மதிலின் பக்கத்தில் இனிமையுறும்படி தங்கியிருந்தார்கள்.

 

887. பந்தியி னிரைத்தனர் பரித்திர ளனைத்து

    முந்துமிட பத்திரளொ டொட்டக நிரைத்தா

    ரிந்துகதிர் கொண்டென விலங்கறை யிடத்தில்

    வந்தபல பண்டமு மணித்தொகையும் வைத்தார்.

31

     (இ-ள்) அவ்வண்ணம் தங்கிய அவர்கள் யாவர்களும் குதிரைக் கூட்டங்களனைத்தையும் வரிசையாக நிறுத்திக் கட்டி உந்தா நிற்கும் யானைக் கூட்டங்களுடன் ஒட்டகக் கூட்டங்களையும் நிரைத்துச் சந்திரனது கிரணங்களைக் கொண்டாற்போலும் பிரகாசியா நின்ற தங்களது விடுதியின்கண் தாங்கள் கொண்டு வந்து பலவிதப் பொருள்களையும் இரத்தினத் தொகைகளையும் சேர்த்து வைத்தார்கள்.

 

888. வித்தக ரனைத்தும்விடு தித்தலைகள் புக்கார்

    மைத்தவழ் முகிற்குடை மறைக்குரிசி லோடு

    மத்தல மிலங்கவபூ பக்கரு மிருந்தா

    ருத்தம குணத்தினொடு மக்கிகளு றைந்தார்.

32