முதற்பாகம்
(இ-ள்) அப்போது
பவளக்கொடிகள் தங்களது சிறிய வேர்களைவிட்டு நானாபக்கங்களிலும் ஓடிப் பிரகாசத்துடன் ஒளிர்வதைப்
போலப் பகுப்பாயிருக்கும் விரல்களைக் கொண்ட சிறிய கால்களையும் மென்மையானது விரியப்பெற்ற
சிறகுகளையுமுடைய புறாவின் கூட்டங்கள் பிரகாசிக்கும்படி கூவுகின்ற சத்தமானது, மாதர்கள் தங்களது
கூந்தலுக்கு ஊட்டா நிற்கும் அகிற்கட்டையினது புகையைத் தாங்காது அங்குற்ற மாடங்களானவை தங்களது
வாய்களைத் திறந்து புலம்புவதை நிகர்த்திருந்தது.
922.
நித்தில நிரைத்த
மாட நிரைதிரை போன்ற நாவா
யொத்தன கரடக் கைமா
வொண்கொடிப் பவளம் போன்ற
கைத்தொடி மகளிர்
செல்வக் கடிமுர சறைத லோதை
நித்தமு மறாத வாரி
நிகர்த்தது நகர மன்றே.
22
(இ-ள்)
அன்றியும், முத்துக்களை நிறைக்கப் பெற்ற அம்மாடங்களானவை வரிசையாகிய சமுத்திரத்தினது அலைகளை
நிகர்த்தன. மதங்களைப் பொழியா நிற்கும் யானைகள் அச்சமுத்திரத்தின்கண்ணுள்ள மரக்கலங்களை
நிகர்த்தன. ஒள்ளிய
பிரகாசத்தையுடைய
துகிற்கொடிகள் அச்சமுத்திரத்தின் கண்ணுள்ள பவளக்கொடிகளை நிகர்த்தன. வளையல்களையணிந்த கைகளையுடைய
பெண்களின் செல்வத்தைப் பொருந்திய மணமுரசினது ஓசை பிரதிதினம் நீங்காத அந்த ஷாம் நகரமானது
அவைகளையெல்லா முடைய சமுத்திரத்தை நிகர்த்தது.
923.
தாறுபாய் தந்தி மாத்தேர்
தானைமும் முரசு வேத
மீறுபண் ணினைய வெல்லா
மெங்கணும் விளங்கு மோதை
மாறிலா தெழில்கொண்
டோங்கும் வளமைமா நகரம் வாய்விண்
டீறிலான் றூதர் வந்தா
ரெனவெடுத் தியம்பல் போலும்.
23
(இ-ள்)
அன்றியும் அங்குசத்திலடங்காது பாயா நிற்கும் யானை - குதிரை - இரதம் - பதாதி - படை - கொடை
- மணமென்னும் மூன்றுவித முரசுகள் வேதத்தினால் எவ்விடங்களிலும் அதிகரிக்கும் இசைகளாகிய
இவைகளெல்லாம் எங்கும் விளங்குகின்ற ஓசையானது, நீங்காத அழகைப் பெற்றோங்கா நின்ற செல்வத்தையுடைய
பெருமை தங்கிய அந்த ஷாமென்னும் பட்டணம் தனது வாயைத் திறந்து முடிவில்லாதவனான ஜல்லஜலாலகுவத்த
ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இவ்விடத்திற்கு வந்தார்களென்று
எடுத்துச் சொல்லுவதை நிகர்த்திருந்தது.
|