பக்கம் எண் :

சீறாப்புராணம்

356


முதற்பாகம்
 

924. மாலைவாய்ப் பலபூண் டாங்கி மான்மதங் கமழ்ந்து வீங்குங்

    கோலமார் பொருப்புத் திண்டோட் குரிசிறன் கதிர்க டாக்கி

    நீலமா மணியிற் செய்து நிரைகதி ரெறித்த வீதி

    வேலைவாய்த் தரளச் சோதி விளங்குவ போன்ற தன்றே.

24

     (இ-ள்) அன்றியும், புஷ்பங்களினால் செய்யப்பட்ட மாலையின்கண் பலவித ஆபரணங்களைச் சுமந்து கஸ்தூரி வாசனை கமழப்பெற்றுப் பூரியா நிற்கும் அழகு பொருந்திய மலைகளுக் கொப்பாகிய வலிமையுற்ற தோள்களையுடைய குரிசிலான நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது சரீரத்தின் கண்ணுள்ள கிரணங்களானவை தாக்கப் பெற்றுப் பெருமை பொருந்திய நீல நிறத்தையுடைய இரத்தினங்களினாற் செய்து வரிசையாகிய கதிர்களை வீசிய அத்தெருவானது, சமுத்திரத்தின் கண்ணுள்ள வெள்ளிய ஒளியையுடைய முத்துக்கள் பிரகாசிப்பதை யொத்திருந்தது.

 

925. பந்தரிட் டலர்கள் சிந்திப் பரிமள மரவ நாற்றிக்

    சந்தகில் கலவைச் சேறு தடவிய மகுட வீதி

    யிந்தெழின் மழுங்குஞ் சோதி யிறையவன் றூதர் மெய்யின்

    கந்தமூ டுலவி யெங்கு மறுவியே கமழ்ந்த தன்றே.

25

     (இ-ள்) அன்றியும், பந்தர்கள் போட்டுப் புஷ்பங்களைப் பொழிந்து வாசனையை யுடைய குங்கும மாலைகளை நானாபக்கங்களிலும் தூக்கிச் சந்தனக் குளம்பு அகிற்பொடி கலவைச் சேறு முதலியவைகளைப் பூசிய சிகரத்தினையுடைய அத் தெருக்களில் அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சந்திரனது அழகும் மழுங்கிப் போகும் பிரகாசத்தையுடைய சரீரத்தின் கண்ணுள்ள பரிமளமானது ஊடுருவப்பெற்று எவ்விடங்களிலும் கஸ்தூரி வாசனையே கமழ்ந்தது.

 

926. முத்தணி பவளத் திண்கான் முறைமுறை நிறுவித் தேர்ந்த

    சித்திர மெழுதி வாய்த்த செறிமயிர்க் கற்றை தூக்கிப்

    பத்திவிட் டெறிக்குங் காந்திப் பன்மணி பரப்பி யோதை

    நித்தமு மறாது செல்வ நிகழ்ந்தவா வணமுங் கண்டார்.

26

     (இ-ள்) அப்போது, நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் முத்துக்களினாலும் பவளங்களினாலும் அலங்காரஞ் செய்யப்பட்ட வலிமை பொருந்திய தூண்களை வரிசை வரிசையாக நிறுத்தித் தேர்ச்சியான சித்திரங்களை தீட்டிச் சிறப்புத் தங்கிய நெருக்கத்தையுடைய மயிர்க்கற்றைகளை யெவ்விடங்களிலும் தூக்கி வரிசைவிட்டு வீசா நிற்கும்