பக்கம் எண் :

சீறாப்புராணம்

358


முதற்பாகம்
 

ஏவிவிடா நின்ற அழகிய இளம் பருவத்தையுடைய வாலிபர்களினது கூட்டத்தினோசையானது, மேகங்களோடும் இடியானது அதிகரித்து முழங்குவதைப் போலும் ஆகாயலோகமும் பூலோகமும் அதிரும் வண்ணம் தோன்றா நின்ற அழகிய வீதிகளினது இடங்களையும் பார்த்தார்கள்.

 

930. வன்னியின் கொழுந்து போற்செம் மணிக்கதி ரூச லேறி

    மின்னனார் பாடி யாடும் வீதிவாய் மலிந்த தோற்றந்

    துன்னிதழ்க் கமலப் போது துயல்வர நாப்பண் வைகு

    மன்னமொத் திருப்ப நோக்கு மகமகிழ்ந் தினிது கண்டார்.

30

     (இ-ள்) அன்றியும், நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மின்னையொத்த பிரபையை யுடைய மாதர்கள் வீதியின்கண் அக்கினிக் கொழுந்தைப் போலச் செந்நிறத்தைக் கொண்ட இரத்தின வர்க்கங்களின் பிரகாசத்தைப் பெற்ற ஊஞ்சலின் மேல் ஏறி இருந்துக் கொண்டு பாடியாடா நிற்கும் பெருகிய தோற்றமானது, நெருங்கிய இதழ்களையுடைய தாமரை மலரானது அசைய அதன் நடுவில் தங்கியிருக்கும் அன்னப் பட்சியை நிகர்த்திருக்கத் தங்களது கண்களும் மனமும் களிப்புற்று இனிமையுடன் பார்த்தார்கள்.

 

931. கந்துக மெடுத்துக் காந்தட் கரத்தினி லேந்தி யாடு

    மந்தர மனைய கொங்கை மயிலனார் முகத்தின் வேர்வை

    சிந்தக டுளைந்து தத்துந் திரைமுகட் டெழுந்து தோன்று

    மிந்துமுத் துகுப்ப தென்ன விடந்தெறு மலியக் கண்டார்.

31

     (இ-ள்) அன்றியும், நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள், காந்தட் புஷ்பத்திற் கொப்பாகிய கைகளினால் பந்துகளை எடுத்துத் தாங்கி விளையாடா நின்ற மலைகளை நிகர்த்த முலைகளைக் கொண்ட மயில்போலும் சாயலையுடைய பெண்களினது முகத்தின் கண்ணுண்டாகும் வேர்வையானது, சமுத்திரத்தினது வயிற்றை யுளைந்துத் தாவிச் சாடுகின்ற அலைகளினது உச்சியிலெழும்பி விளங்கா நிற்கும் சந்திரனானது முத்துக்களைச் சொரிவதைப் போல இடங்களெல்லா வற்றிலும் பெருகும்படி பார்த்தார்கள்.

 

932. கருமணிக் கழங்கு கஞ்சக் கரத்தினி லெற்றி யாடச்

    சுரிகுழன் மலர்வண் டென்னச் சுரும்பினந் தாவ நோக்கி

    யரிவைபுன் முறுவ றோன்ற வணிநகைக் கதிரின் முத்தாய்த்

    தெரிதரப் புதுமை காட்டுந் தெருத்தலைச் சிறப்புங் கண்டார்.

32