பக்கம் எண் :

சீறாப்புராணம்

37


முதற்பாகம்
 

     61. செந்நெலிற் பெருக்கின் கனைகுரற் சகடந்

          திசைதொறு மலிந்தன செருக்குங்

        கன்னலங் கழனி புகுந்தறுத் தடைந்த

          களமர்க ளொலிகுரற் செருக்குந்

        துன்னுபூங் கமுகு சிதறுசெம் பழுக்காய்

          சுமப்பவர் கம்பலைச் செருக்கு

        மன்னவன் வகுதைத் துரையபுல் காசீம்

          வளமனைச் செருக்குமொத் திருக்கும்.

41

      (இ-ள்) செந்நிறத்தை யுடைய நெல்லினது அதிகரிப்பைக் கொண்ட ஒலிக்கின்ற சத்தத்தையுடைய வண்டிகள் அவ்வாறு திசைகள் தோறும் மலிந்தனவாகிய செருக்கும், கரும்புகளையுடைய அழகிய வயல்களிற் புகுந்து கதிர்களை அறுத்துவந்து சேர்ந்த உழவர்களின் ஒலிக்கின்ற சத்தத்தினது செருக்கும் பூக்கள் நெருங்கப் பெற்ற கமுகமரங்கள் சிதறிய சிவந்த பாக்குகளைச் சுமப்பவர்களின் சத்தத்தினது செருக்கும், வகுதை நகரத்தினது அரசனான துரையாகிய இந்நூலின் கொடை நாயகன் அபுல் காசீ மென்பவனது செல்வந் தங்கிய வீட்டினது செருக்கும் ஒத்திராநிற்கும்.

 

கலிநிலைத்துறை

 

     62. கால வட்டவாய் முளரியி லூறுகள் ளருந்திக்

        கோல வட்டவஞ் சிறையளி குழுவுடன் பாடுஞ்

        சோலை வட்டவாய் மயிலினஞ் சூழ்ந்துகார் நீல

        வால வட்டமொத் திருந்தமென் சிறைவிரித் தாடும்.

42

      (இ-ள்) அன்றியும், வட்டவடிவை யுடைய வாயைக் கொண்ட தாமரை மலரில் சுரக்கின்ற மதுவைக் குடித்து அலங்காரந் தங்கிய அழகிய வட்ட சிறகுகளை யுடைய வண்டுகள் தங் கூட்டத்தோடும் இராகங்களைப் பாடுகின்ற சோலைகளினது வட்டத்தைப் பெற்ற இடத்தின்கண் மயிலின் கூட்டங்கள் வளைந்து கருமையும், நீல நிறத்தையுமுடைய ஆலவட்டத்தை நிகர்த்திருந்த மெல்லிய தங்களின் சிறகுகளை விரித்து ஆடாநிற்கும்.

 

63. அரக்கெ றிந்தசெவ் வாம்பல்வா யணியிழை மடவார்

   நெருக்கி யிட்டகாற் சிலம்பொலி விசும்புற நிமிர

   விருக்கும் வாவியுட் பெடையன மிடர்கொலென் றிரங்கித்

   தருக்கி ழந்துதன் சேவல்வாய்த் தொனியெனத் தயங்கும்.

43

      (இ-ள்) அன்றியும், மதுவை வீசிய செந்நிறத்தைக் கொண்ட ஆம்பல் மலர்போலும் வாயையும், அழகிய ஆபரணங்களையுமுடைய பெண்கள் தங்களின் காலி னிடத்து