பக்கம் எண் :

சீறாப்புராணம்

38


முதற்பாகம்
 

நெருக்கியிட்ட சிலம்பினது ஓசையானது ஆகாயத்தின்கண் பொருந்தும்படி யோங்க தடாகத்தினிடத்துத் தங்கியிருக்கும் பெட்டை யன்னங்கள் துன்பமென்று சொல்லி ஒலித்துச் சௌரியத்தை இழக்கப் பெற்றுத் தனது சேவலாகிய ஆண் அன்னத்தின் வாயினது ஓசையென்று திகையா நிற்கும்.

 

64. நலங்கொ டாமரை முகமலர் தரநறுங் குவளை

   விலங்கி வள்ளையில் விழியெனக் கிடப்பமெல் லரும்பு

   துலங்கு மென்முலை தோன்றிடப் பச்சிலைத் துகில்போர்த்

   திலங்கும் வாவிக ளணியிழை மகளிரொத் திருந்த.

44

      (இ-ள்) அன்றியும், பிரகாசிக்கின்ற தடாகங்கள் நலத்தைக் கொண்ட தாமரை மலராகிய முகமானது மலரவும், நறிய குவளைப் புஷ்பமானது விலகி வள்ளையின்கண் கண்களைப் போல கிடக்கவும், மெல்லிய கமலத்தினது முகையாகிய விளங்குகின்ற மேன்மைய வான முலைகள் பிரகாசிக்கவும், பச்சை நிறத்தைப் பெற்ற இலையாகிய வஸ்திரத்தினால் மூடி அழகிய ஆபரணங்களை யுடைய மாதர்களை நிகர்த்திருந்தன.

 

65. நிறைந்த சண்பகம் பாடலந் தடக்கரை நிரம்பச்

   சொரிந்த பன்மலர் மீதினில் வரியளித் தோற்ற

   மெரிந்தி லங்குபொற் கரையினை யிரும்பினா லிறுகப்

   பரிந்த றைந்தசுள் ளாணியின் புறமெனப் பரந்த.

45

      (இ-ள்) அன்றியும், அத்தடாகங்களின் பெரிய கரைகளில் வரிசையாகிய பாடலம் சண்பக மிவைகள் நிரம்பும் வண்ணம் சிந்திய பல புஷ்பங்களின் மேல் இருக்கும் இரேகைகளைக் கொண்ட வண்டுகளின் தோற்றமானது எரிந்து பிரகாசியா நிற்கும் பொன்னினாலான கரையை இரும்பினால் இறுகும்படி பரிவுற்று அறைந்த சுள்ளாணியின் புறத்தைப் போல பரந்தது.

 

66. தோட விழ்ந்துபூந் தாதுகக் குடைந்தினச் சுரும்பு

   பாட வாவியு ளிளநிலாத் தோற்றிய பான்மை

   சாடும் வார்புன லலைதரத் திரைகளிற் றத்தி

   யோட மோடுவ தொத்திருந் தனவென வொளிரும்.

46

      (இ-ள்) அன்றியும், கூட்டமாகிய வண்டுகளானவை மலர்களினிதழ்கள் அமிழ்ந்து மகரந்தங்கள் சிந்தும் வண்ணம் தங்களின் கால்களினாற் கிண்டி இராகங்களைப் பாடத் தடாகத்தினகம் இளம்பிரகாசம் தோற்றிய தன்மையானது, சாடுகின்ற நீண்ட நீர் அசையும்படி, அலைகளில் பாய்ந்து ஓடமானது ஓடுவதை நிகர்த்திருந்தனவென்று ஒளிரா நிற்கும்.