பக்கம் எண் :

சீறாப்புராணம்

471


முதற்பாகம்
 

      (இ-ள்) பின்னர் வலிமை தரும் வண்ணம் நின்று அழகானது பிரகாசித்திடப் பிரபைகள் நீங்காத கஃபத்துல்லாவென்று சொல்லும் பெரிய இன்பத்தையுடைய அத்துறையானது விரிவான காரணங்களை யுடைய நபிநூகு அலைகிஸ்ஸலா மவர்களினது காலத்தில் ஆகாயம் வரையும் ஒலித்து வீசிய ஜலப்பிரளயத்தினால் இடிந்தது.

 

1224. நிறைந்தி லங்கிய திடிந்தது கிடந்தது நெடுநாட்

     பிறந்து நூகுதன் பதினொரு தலைமுறைப் பின்னர்

     துறந்த பேரிபு றாகீம்நன் னபியெனுந் தூயோர்

     சிறந்தி லங்கிடக் ககுபத்துல் லாவினைச் செய்தார்.

9

      (இ-ள்) பூரணமாய்ப் பிரகாசித்த அக்கஃபத்துல்லா அவ்வாறு இடிந்து நெடிய காலபரியந்தம் கிடந்தது. நபிநூகு அலுகிஸ்ஸலா மவர்களின் பதினொரு தலைமுறைக்குப் பின்னர் அவதரித்துத் துறந்த கீர்த்தியையுடைய நல்ல நபியென்று சொல்லும் பரிசுத்த மானவர்களான இபுறாகீ மலைகிஸ்ஸலாமவர்கள் சிறப்புற்றுப் பிரகாசிக்கும்படி இந்தக் கஃபத்துல்லாவைச் செய்தார்கள்.

 

1225. கன்னல் வேலிமக் காபுரக் ககுபத்துல் லாவை

     நன்ன யம்பெறு நெறியிபு றாகிநன் னபிக்குப்

     பின்ன மாலிக்கத் தென்பதோர் கூட்டத்திற் பெரியோ

     ருன்ன தம்பெற விடம்பெறச் செய்துயர்த் தினரே.

10

      (இ-ள்) அவ்வாறு செய்த மிகுத்த மேன்மை கொண்ட சன்மார்க்கத்தையுடைய நல்ல நபிப்பட்டம் பெற்ற நபி இபுறாகீமலைகிஸ்ஸலாமவர்களுக்குப் பின்னர் அழகிய மாலிக்கத்து என்று சொல்லுவதான ஒரு கூட்டத்திலுள்ள பெரியோர்கள் கரும்பினது வேலிகளை யுடைய திருமக்கமா நகரத்தினது அந்தக் கஃபத்துல்லாவை உயர்ச்சிபெறும் வண்ணம் விசாலமாகச் செய்து உயர்த்தினார்கள்.

 

1226. அறப மாலிக்கத் தென்பதோர் கூட்டத்துக் கணித்தாய்ச்

     சுறுகு மென்னுமக் கூட்டத்தி னரசர்கள் சூழ்ந்தே

     யிறைவ னேர்வழிக் ககுபத்துல் லாதனை யியல்பாய்

     மறைப டாதொளி பெருக்கிடச் செய்துவைத் தனரே.

11

      (இ-ள்) அவ்விதம் செய்து உயர்த்திய அரபி ராஜியத்திலுள்ள அழகிய மாலிக்கத் தென்று சொல்லுவதான ஒப்பற்ற கூட்டத்திற்குச் சமீபமாயுள்ள சுறுகுமென்று சொல்லும் கூட்டத்தினது இராஜர்கள் வளைந்து யாவற்றிற்கும் இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் உண்மையான மார்க்கத்தை யுடைய அந்தக் கஃபத்துல்லாவை இயல்போடும் மறையாது பிரகாசத்தை நானாபக்கங்களிலும் பெருக்கிடும்படி செய்து வைத்தார்கள்.