பக்கம் எண் :

சீறாப்புராணம்

472


முதற்பாகம்
 

1227. விசய மிக்குயர் சுறுகுமாங் கூட்டத்தின் வீரர்

     திசைவி ளங்கிடச் செய்தன ரிருந்தது சிலநா

     ளிசைய நல்லெழிற் ககுபத்துல் லாதனை யிறக்கிக்

     குசையு வென்பவ ரதிகமா யியற்றினர் குறித்தே.

12

      (இ-ள்) வெற்றியானது அதிகமா யோங்கா நிற்கும் அந்தச் சுறுகும் கூட்டத்தின் வீரர்கள் எண்டிசைகளிலும் பிரகாசிக்கும்படி அவ்வாறு செய்தார்கள். அதோடு சிலகாலமாக இருந்தது. பின்னர் குசையு என்பவர் தமது மனசின்கண் மதிப்பிட்டு இசையும் வண்ணம் நல்ல அழகையுடைய அந்தக் கஃபத்துல்லாவை இறக்கி அதிகமாய்ச் செய்தார்.

 

1228. பெருகு நற்குலக் குசையெனும் வேந்தர்க்குப் பின்னர்

     முருகு பூம்பொழின் மக்கமா நகரியின் முதிர்ந்து

     செருகு மாமழைத் தாரையிற் பிரளயஞ் சிதைப்பத்

     தருகை மன்னவர் குறைசிகள் செய்துவைத் தனரால்.

13

      (இ-ள்) அவ்வாறு செய்த பெருகா நிற்கும் நல்ல குலத்தினையுடைய குசையு என்று சொல்லும் அரசருக்குப் பிற்பாடு வாசனையமைந்த புஷ்பங்களைக் கொண்ட சோலைகளையுடைய திருமக்கமா நகரத்தில் முதிர்தலுற்றுப் பிரளயமானது அதை அழிக்கவே, ஈகையை யுடைய வேந்தர்களாகிய குறைஷிகள் அக்கஃபத் துல்லாவைச் செய்து வைத்தார்கள்.

 

1229. கணம ணித்திரள் கதிருமிழ் ககுபத்துல் லாவைப்

     பிணைய றாங்கிய புயவரைக் குறைசிகள் பெரிதா

     யிணைபி றப்பதற் கிலையென வெழிலொடு மிலங்க

     மணமு றும்படிச் செய்துவைத் திருக்குமந் நாளில்

14

      (இ-ள்) மலர்மாலைகள் சுமந்த தோள்களாகிய மலைகளையுடைய குறைஷியர்கள் நட்சத்திரம் போலும் இரத்தினவர்க்கங்கள் கிரணங்களை யுமிழாநிற்கும் அக்கஃபத்துல்லாவைப் பெரிதாய் ஒப்பானது வேறே யாதொன்றும் பிறப்பதற் கில்லையென்று சொல்லும் வண்ணம் அழகுடன் ஒளிரப் பரிமளமானது பொருந்தும்படி செய்து வைத்திருக்கும் அந்தக் காலத்தில்.

 

1230. அருளி லாமனக் கொடுங்கொலைக் கரவிட ரடுத்துப்

     பொருளங் குண்டெனக் ககுபத்துல் லாநடுப் புறத்திற்

     றிருடுங் கன்னம்வைத் தறப்பறித் தடிமதிள் சிதைப்ப

     விருள றுங்கதிர் மேனிலை யொடுமிடந் ததுவே.

15