பக்கம் எண் :

சீறாப்புராணம்

509


முதற்பாகம்
 

திருவருளினால் சொல்லிய சூறத்துல் முஸ்ஸம்மிலென்று கூறும் வேதவசன மிறங்கியது.

 

1332. சிலம்பி லுறைந்த முகம்மதுவைத்

         திருந்து மமரர் கோமான்கொண்

     டுலம்பற் றுறுஞ்சின் னெறியினிழிந்

         துடனின் றரிதோர் மருங்கணைந்து

     நிலம்பிட் டுதிர மண்சிதற

         நிலவா மணித்தாள் கொடுகீண்டப்

     பிலம்பட் டுறைந்த நறுஞ்சலிலம்

         பிறந்து குமிழி யெழுந்தனவே.

37

      (இ-ள்) அப்போது வானவர்களின் இராஜரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் அந்த ஹிறாமலையின்கண் தங்கியிருந்த நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் தங்களுடன் கூட்டிக் கொண்டு திரளைக்கற்கள் பொருந்திய ஒரு சிறிய பாதையிலிறங்கித் திருந்திய அரிதான ஒரு பக்கத்தில் சேர்ந்து தங்களின் பிரகாசித்த இரத்தினப் பாதத்தைக் கொண்டு பூமியைப் பிள்ளச் செய்து சொரியவும் மண்கள் சிதறவும் கிளைக்கவே பாதத்தில் பதிந்து தங்கியிருந்த வாசனையையுடைய தண்ணீரானது உதயமாய்க் குமிழிகள் எழும்பின.

 

1333. பெருகிப் பரந்த புனற்கரையிற்

          பெரியோன் றூதை யருகிருத்தி

     மருவு மலரு மெனவுலுவின்

          வகையுந் தொகையும் வரவருத்திக்

     குரிசி னபியைப் பின்னிறுத்திக்

          குறித்த நிலைரண் டிறக்அத்துப்

     பரிவிற் றொழுவித் திருந்துவிண்ணிற்

          படர்ந்து சுவனத் தலத்துறைந்தார்.

38

      (இ-ள்) அவ்வாறு எழும்பி அதிகரித்துப் பரவிய தண்ணீரினது கரையில் ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் பெரியவனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலானவர்களைத் தங்களின் பக்கத்திலிருக்கும்படி செய்து வாசனையையும் புஷ்பத்தையும் போல உலுவினது வகையையும் தொகையையும் வரும் வண்ணம் வருத்திக் குரிசிலான அந்நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் தங்களுக்குப் பின்னாக நிறுத்தி மனசின்கண் குறித்த நிலைபரத்தோடும் அன்புடன் அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவைத் தொழுது திருந்திய ஆகாயத்தின்கண் நடந்து சொர்க்கலோகத்தி னிடத்திற் போய்ச் சேர்ந்தார்கள்.